கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையன் சாலையில் சாதாரணமாக நடந்து சென்று ஆட்டோவில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆனால் போலீசார் இன்னும் இந்த சிசிடிவி காட்சிகளை உறுதிபடுத்தவில்லை
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நேற்று அதிகாலை வைரம், பிளாட்டினம் மற்றும் 200 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. வழக்கமாக கடையைத் திறந்த ஊழியர் கடையில் இருந்த ஆதரவற்றுக்கான உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக நகைக்கடை மேலாளருக்கு தகவல் அளித்தார்.
அதன் பெயரில் விரைந்து வந்த மேலாளர் கடையில் இருந்த ஆபரணங்கள் மாயமாகி இருந்ததும், சிசிடிவி-யில் மர்மநபர் ஆபரணங்களை கொள்ளையடித்து செல்வதையும் கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் கடையின் வெளியே கிடந்த கொள்ளையனின் சட்டை மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இரவு ஒரு மணி அளவில் ஏசி வென்டிலேட்டர் வழியே கடைக்குள் நுழைந்த திருடன் மூன்று மணி வரை, கடையில் நகைகளை சாகவசாமாக தேர்வு செய்து தங்கம் மற்றும் வைரம் பிளாட்டினம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றான்.
இதனைத் தொடர்ந்து கடையின் பின்பக்கம் வழியாக வெளியேறிய கொள்ளையன் அப்பகுதியில் சாதராணமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் நகைகள் கொண்ட பையுடன் எவ்வித பதற்றமும் இன்றி சாலையில் நடந்து செல்வது தெளிவாக பதிவாகி உள்ளது. மற்றொரு சிசிடிவி கட்சியில் சுமார் 4 மணி அளவில் கொள்ளையன் ஆட்டோவில் பயணம் செய்யும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை : சாதாரணமாக நடந்து சென்று ஆட்டோவில் ஏறி செல்லும் கொள்ளையன்?#Coimbatore | #JosAlukkas pic.twitter.com/E0L4xCtvKd
— Indian Express Tamil (@IeTamil) November 29, 2023
இதனைதொடர்ந்து கொள்ளையன் ஏறிச்சென்ற ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரணை நடத்திய போலீசார், ஜோஸ் ஆலுக்காஸ் கடை ஊழியர்கள் மற்றும் பணியில் இருந்து விடுபட்டவர்கள், புணரமைப்பு பணிக்காக வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதேபோன்று ஆட்டோவில் இருந்து பேருந்தில் ஏறி தப்பி சென்றதாக சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ள நிலையில் பொள்ளாச்சி பாலக்காடு மற்றும் உடுமலை ஆகிய பகுதிகளில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறிய கொள்ளையன் பாதி வழியிலேயே இறங்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகளின் உண்மைத்தன்மை குறித்து போலீசார் இதுவரை உறுதிபடுத்தவில்லை. கொள்ளை நடந்த போது அப்பகுதியிலிருந்த செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்து வரும் தனிப்படை போலீசார் விரைந்து கொள்ளையனை கைது செய்து விடுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.