பட்டியல் சமூகத்தினர் குறித்து இழிவாக பேசிய நடிகர் கார்த்திக் குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2000-ம் ஆண்டு வெளியான அலைப்பாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக் குமார். ஸ்டாண்டப் காமெடியானா இவர், தொடர்ந்து, வானம் வசப்படும், கண்டநாள் முதல், உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த நிலையில், தனுஷூடன் இணைந்து யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
அதேபோல் கடந்த 2008-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான பொய் சொல்லப்போறோம் என்ற படம் இவருக்கு பாராட்டுக்களை குவித்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்த கார்த்திக் குமார், கடந்த 2005-ம் ஆண்டு பாடகி சுசித்ராவை திருமணம் செய்துகொண்டார். 12 வருடங்கள் இவர்கள் திருமண வாழ்க்கை தொடந்த நிலையில், 2017-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
தற்போது அமிர்தா ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்துகொண்ட கார்த்திக் குமார் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் குறித்து பல சர்ச்சையாக கருத்துக்களை கூறி வருகிறார். இதனிடையே கார்த்திக் குமார் பட்டியல் சமூகத்தினர் குறித்து இழிவாக பேசியதாக ஒரு ஆடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சுசித்ரா கார்த்திக் குமாரை ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறியதால், சுசித்ராவுக்கு போன் செய்து கார்த்திக் குமார் பேசியதாக ஆடியே ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில், "நீ மிகவும் அசிங்கமாக பேசுற, இது படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுவது போல நீ பேசுற. உன் வளர்ப்பு அப்படியில்லையே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதானே. நீ நல்ல ஆச்சாரமான பிராமின் குடும்பத்துல இருந்துதானே வந்த என்று பேசியது போல் இருக்கிறது. இந்த ஆடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பெண்கள் மற்றும் பட்டியலின் மக்கள் குறித்து இழிவாக பேசிய கார்த்திக் குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் அணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில், கந்த மே 15-ந் தேதி கார்த்திக் குமார் என்ற நடிகர் சமூகவலைதளங்களில் சுசித்ரா என்ற நடிகையை ஆபாசமாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வாயில் சொல்ல முடியாத வார்த்தைகளால், திட்டினார். குறிப்பாக பட்டியலின சமூகத்தின் பெயரையும் குறிப்பிட்டு, இழிவாக பேசி இருக்கிறார்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இவர்களின் தனிப்பட்ட ஆபாச பிரச்சினைகளுக்காக ஒரு சமூகத்தை இழிவு படுத்துவது கண்டிக்கத்தக்கது. எனவே, அமைதியாக அனைத்து சாதியினரும் ஒன்றாக சகோதரர்களாக, அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில், சாதி கலவரத்தை தூண்டியதற்காகவும், ஒரு பெண்ணை ஆபாசமாக பேசியதற்கும் இவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“