கார்த்தி அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற 96 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம்குமார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக மெய்யழகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்தி, ஸ்ரீதிவ்யா, அரவிந்த் சாமி, ராஜ்கிரன், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மெய்யழகன் படத்திற்கு தியேட்டரில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. நீளம் அதிகமாக உள்ளது. இடைவேளைக்கும் பின் 2 கேரக்டர்களை வைத்து படத்தை முடித்துவிட்டார்கள் என பல குறைகளை கூறியிருந்தனர். ஆனால் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான மெய்யழகன் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த வகையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மெய்யழகன் படத்தை பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம்.
எனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக எனக்குள் கொண்டுவந்த படம். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் சி.பிரேம்குமார் பார்வையாளர்களை உறவுக்கூட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். Really felt good watching this feel good movie. என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“