தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தனிக்குடித்தனம் நடத்தியதுடன் தன்னிடம் இருந்து நகை மற்றும் பணத்தை, ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக பிரபல நடிகர் காதல் சுகுமார் மீது கடந்த ஜனவரி மாதம் ஒரு பெண் புகார் அளித்த நிலையில், தற்போது இந்த வழக்கில் காதல் சுகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில், சிம்புவின் காதல் அழிவதில்லை, கமல்ஹாசன் நடித்த விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தவர் காதல் சுகுமார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதனால் காதல் சுகுமார் என்று அழைக்கப்படும் இவர், 50-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் திருட்டு விசில், சும்மாவே ஆடுவோம் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
தற்போர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். இதனிடையே காதல் சுகுமார் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், தன்னிடம் இருந்து நகை, மற்றும் பணத்தை மோசடி செய்துவிட்டதாகவும் கூறி ஒரு பெண் புகார் அளித்திருந்தார். சென்னையை சேர்ந்த அந்த பெண் சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். திருமணமாகி குழந்தையுடன் வசித்து வரும் அவர், கணவரை பிரிந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக சுகுமாருடன் அவருக்கு பழக்கம் இருந்தாக கூறியுள்ளார்.
அவரை காதலிப்பதாக கூறியுள்ள சுகுமார் திருமணம் செய்துகொள்வதாக கூறி, அவரை தனி வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தியுள்ளார். மேலும் அவரிடம் இருந்து அடிக்கடி நகை மற்றும் பணத்தை வாங்கி வந்த சுகுமார், சமீபகாலமாக அவரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டுள்ளார். இது குறித்து அந்த பெண் விசாரித்தபோது சுகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது தெரியவந்துள்ளது, இதனையடுத்து திருணம் ஆனதை மறைத்து தன்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அளிக்கப்பட்ட இந்த புகார் மீது 3 மாதங்களுக்கு பிறகு சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன், பணத்தை திருப்பி தருவதாக கூறி செக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த செக் வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி வந்துவிட்ட நிலையில், சுகுமார் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிகழ்வு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.