/indian-express-tamil/media/media_files/2024/10/29/Xxqeh6dVvrvzZ9YZ4uzY.jpg)
மறு அறிவிப்பு வரும்வரை புதிய பட வேலைகளை தொடங்க வேண்டாம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளர்களின் கூடுதல் பணிச்சுமையை குறைப்பது தொடர்பான மற்ற சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், நவம்பர் 1-ந் தேதி முதல் புதிய பட வேலைகளை தொடங்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்பட தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுவதால் திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் புதிய படங்களை துவக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் சொல்லி இருந்தோம்.
தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில் பல யூனியன்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக வந்துள்ளது. இன்னும் சில யூனியன்களிடம் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. அதை முழுமையாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டியுள்ளது. இவை அனைத்தும் முழுமையாக பேசி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு தொடர்கிறது என்பதை தயாரிப்பாளர்களர்களுக்கு தெரிய படுத்தி கொள்கிறோம்.
நமது ஒற்றுமையே தயாரிப்பு தொழிலை சிறப்புற செய்யும். ஒற்றுமையை வலிமையோடு நிலைநாட்டுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் புதிய படங்களின் பணிகள் தொடங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.