திரைப்படத்தின் வசூலை பிரித்துக் கொள்வதில், விநியோகஸ்தர்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதன்படி ’ஏ’ சென்டரில் முதல் வார வசூலில் ரஜினி, விஜய், விஜய் படம் என்றால் 60% எனவும், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படம் என்றால் 55% ஆகவும், மற்ற நடிகர்கள் படம் என்றால் 50%மும் விநியோகிஸ்தர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பி,சி சென்டருக்கு இதில் இருந்து 5% அதிகமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர்களுக்கு அனைத்து சென்டருக்கும் 50% வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் இரண்டாவது வார வசூலில் முதல் வாரம் தரும் சதவிகிதத்தில் இருந்து 5% குறைவாக விநியோகிஸ்தர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் அசோசியேசனின் தலைவர், திரு.எம்.சுப்பிரமணியிடம் கேட்டோம், “கேரளாவுல எல்லாம் அதிகபட்சமா 60% தான் விநியோகஸ்தர்களுக்குக் கொடுக்குறாங்க. ஆனா இங்க தமிழ் நாட்ல அவங்களுக்கு 70%, தியேட்டர் உரிமையாளர்களான எங்களுக்கு 30%. இது குறிப்பிட்ட மண்டலத்துல அல்லது குறிப்பிட்ட படங்களுக்கு கொஞ்சம் மாறும்.
இந்தத் தொகை எங்களுக்கு கட்டுபடியாகல. அதான் இனி விநியோகஸ்தர்களுக்கு 60% வசூலும், எங்களுக்கு 40% வசூலும் பிரிச்சிக்கலாம்ன்னு எங்க அசோஸியேஸன்ல முடிவு எடுத்திருக்கோம்” என்றார்.
இவர்கள் வெளியிட்டிருக்கும் இந்த பட்டியலில், கமல்ஹாசன், விக்ரம், விஷால், கார்த்தி, ராகவா லாரன்ஸ் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.