கவிஞர் வைரமுத்துவுக்கு இருக்கும் வீடுகளை பட்டியலிட்டுள்ள சவுக்கு சங்கர் அவருக்கு தமிழக அரசு சார்பில் எதற்காக வீடு வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் முக்கியமானவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை தனது எழுத்தின் மூலம் கொடுத்துள்ள வைரமுத்து அதற்காக பல விருதுகளையும் வென்றுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. இதனிடையே சாகித்யஅகாடாமி விருது பெற்ற கவிஞர்களுக்கு தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவர்கள் விரும்பிய இடத்தில் வீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கிய பங்களிப்புக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற விருதுகள், சாகித்ய அகாடமி விருது, கலைஞர் செம்மொழி விருது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு விருதை பெற்றவர்களுக்கு 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் அவர்கள் விரும்பிய இடத்தில் வீடு வழங்கப்படும்" என அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு விருது பெற்ற எழுத்தாளர்கள் ஈரோடு தமிழன்பன், புவியரசு, சுந்தரமூர்த்தி, பூமணி, மோகராசு, இமயம் ஆகிய 6 பேருக்கு அவர்கள் விருப்பத்துக்கேற்ப சென்னை, கோவையில் வீடுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், தனது ட்விட்டர் பதிவில், "வைரமுத்து வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு? இவருக்கு எதுக்கு கனவு இல்லம் வீடு? 2006-ல் சம்பாரிச்சது கொஞ்ச நஞ்சம் அல்ல. பெரியார் படத்துல ஒரு பாட்டுக்கு 5 லட்சம் வாங்குன பெரிய மனுசன். அந்த படமே அரசு மானியதுத்துல எடுத்ததுதான். இந்த அரசாங்கத்துக்கு துளி கூட சூடு, சொரணை கிடையாதா? என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், வைரமுத்துக்கு சொந்தமாக சென்னை பெசன்ட் நகர், திருவான்மியூரில் உள்ள 3 வீடுகளின் முகவரி உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு "கவிஞருக்கு இந்த மூணு வீடு போதாதா? கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா உங்களுக்கு? யார் அப்பா வீட்டு பணம்? " என பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil