குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் 3-வது பரிசு பெற்றது குறித்து யூடியூப்பர் இர்பான கூறியதை கேட்ட நடிகர் நானி, அவரையே கலாய்த்து பதில் அளித்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இர்பானை கிண்டல் செய்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. ரேடியோ ஜாக்கியாக இருந்து, சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள இவர், தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இதன் காரணமாக, நானி நடிக்கும் படங்கள் தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழகத்திலும் பெரிய வரவேற்பை பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது நானி நடித்துள்ள படம் ஹிட் தி தேர்டு கேஸ்.
கடந்த 2020-ம் ஆண் வைசாக் சென் நடிப்பில் வெளியான ஹிட் தி பர்ஸ்ட் கேஸ், 2022-ம் ஆணடு ஆத்வி சேஷ் நடிப்பில் வெளியான ஹிட் தி செகண்ட் கேஸ் ஆகிய படங்களை தனது வால்போஸ்டர் சினிமா நிறுவனத்தின் மூலம் தாயரித்திருந்த நானி, தற்போது, ஹிட் தி தேர்டு கேஸ் படத்தை தயாரித்து தானே ஹீரோவாக நடித்துள்ளார். கே.ஜி.எஃப், கோப்ரா ஆகிய படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஸ்ரீநிதி இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சைலேஷ் கோலனு இயக்கியுள்ள இந்த படத்தில், அர்ஜூன் சர்கார் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் நானி. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இந்த படம் நாளை (மே 1) வெளியாக உள்ள நிலையில், நடிகர் நானி, இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் சென்னை வந்த அவருக்கு, தமிழ்நாட்டு நானி ரசிகர்கள் சார்பில், தமிழ்நாட்டின் அன்பு என்ற பெயரில் அவருக்கு ஒரு சட்டை பரிசாக வழங்கப்பட்டது. இந்த சட்டை தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
இதனைத் தொடர்ந்து யுடியூப்பர் இர்பானுக்கு நானி பேட்டி கொடுத்துள்ளார். அப்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து பேசிய இர்பான், எனக்கு ஓரளவு சமைக்க தெரியும். அந்த நிகழ்ச்சியில் நான் 3-வது பரிசு பெற்றேன் என்று சொல்ல, அந்த ஷோவில் யாருக்குமே சமைக்க தெரியாது. அதில் 3-வது பரிசா என்று நேராடியாக கலாய்த்துள்ளார் நானி. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமூகவலைதளங்களில் தனது நடத்தையின் மூலம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் யூடியூபர் இர்பான், சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையின் போது, பொதுமக்களுக்கு பரிசு வழங்கி அவர்களை கேலி செய்யும் விதமாக பேசியது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதற்காக நேற்று அவர், பொதுவெளியில் இவ்வாறு நடந்துகொண்டது தவறு தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.