/indian-express-tamil/media/media_files/2025/05/27/2xBXGRzyswMVCgiYb4ZO.jpg)
தெலுங்கு திரையுலகில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் தயாராகி வரும் சரித்திரப் படமான 'கண்ணப்பா' பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சிவபெருமானாக தெலுங்கில் அறிமுகமாகிறார். பிரபாஸ் 'டிவைன் கார்டியன்' ருத்ராவாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். காஜல் அகர்வால், மோகன் பாபு, மது மற்றும் மோகன்லால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. படத்தின் மிக முக்கியமான விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிரைவ் ஒன்று காணாமல் போயுள்ளது. மும்பையைச் சேர்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனம் ஒன்று இந்த ஹார்ட் டிரைவை கண்ணப்பா பட தயாரிப்பு அலுவலகத்தில் கொடுத்துள்ளது. ரகு என்பவர் அந்த டிரைவை பெற்று, சரிதா என்ற நபரிடம் கொடுத்ததாகவும், அதன் பிறகு சரிதாவைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் விஜய் குமார் புகார் அளித்துள்ள நிலையில், பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில், அக்ஷய் குமார் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். ஏப்ரல் மாதம், பிரபல திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் தனது எக்ஸ் (X) பக்கத்தில் படத்தின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தினார். அதன்படி, 'கண்ணப்பா' திரைப்படம் வரும் ஜூன் 27, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் படக்குழு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தது. அப்போது பேசிய விஷ்ணு மஞ்சு, "கண்ணப்பாவுக்காக எனது வாழ்க்கையின் பத்து வருடங்களை அர்ப்பணித்திருக்கிறேன். முதலமைச்சரை சந்தித்தது எங்களுக்குப் பெருமையான தருணம். படத்தின் ஆன்மாவை அவர் உணர்ந்துகொண்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. கண்ணப்பா வெறும் கதையல்ல, அது ஒரு கலாச்சாரத்தின் மறுமலர்ச்சி என்பதை அவர் புரிந்துகொண்டார்.
இதுபோன்ற படங்கள் மேலும் உருவாக வேண்டும் என்று அவர் கூறியது, சினிமாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார சக்தியை உறுதிப்படுத்துகிறது. நமது புராணங்கள், வரலாறு மற்றும் நமது வீரர்கள் பெரிய திரையில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை அவரது வார்த்தைகள் நினைவூட்டுகின்றன. படத்தின் வெளியீட்டு தேதியை அவர் வெளியிட்டது எங்களுக்கு கிடைத்த பாக்கியம்" என்று கூறியிருந்தார்,
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரில் பிரபாஸ் ருத்ராவாகவும், அக்ஷய் குமார் சிவபெருமானாகவும் காட்சியளித்தனர். பக்தி, தியாகம் மற்றும் பிரம்மாண்டம் நிறைந்த ஒரு வரலாற்று கதையாக இப்படம் இருக்கும் என்று டீசர் மூலம் தெரிய வருகிறது. ஹார்ட் டிரைவ் காணாமல் போன இந்த சிக்கல் படக்குழுவினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.