தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான "தளபதி" விஜய் நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலையை எதிர்கொண்டார். இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பை கோடைக்கானலில் முடித்துவிட்டு விஜய் தனது குழுவினருடன் விமான நிலையம் வந்தடைந்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Thalapathy Vijay’s bodyguard points gun at fan who breached security at Madurai airport to meet the star. Watch
விஜய் விமான நிலையத்திற்கு கருப்பு நிற காரில் வந்தபோது, ஏராளமான ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக அங்கு திரண்டிருந்தனர். அவர் காரை விட்டு இறங்கியதும், அவரது பாதுகாவலர்கள் உடனடியாக அவரை சூழ்ந்துகொண்டு பாதுகாப்பு வளையம் அமைத்தனர். ரசிகர்கள் ஆரவாரம் செய்து விசில் அடித்தவாறு தங்கள் அபிமான நடிகரை வரவேற்றனர்.
விஜய் விமான நிலைய முனையத்தின் வாயிலை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஒரு முதியவர் பாதுகாப்பு வளையத்தை மீறி விஜய்யின் அருகே வந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜய்யின் பாதுகாவலர் ஒருவர், அந்த முதியவரை அச்சுறுத்தலாக கருதி தனது துப்பாக்கியை எடுத்து அவர் மீது குறி வைத்தார். மற்ற பாதுகாவலர்கள் உடனடியாக அந்த முதியவரை பிடித்து இழுத்துச் சென்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையை விஜய் கவனிக்கவில்லை. அவர் ரசிகர்களை நோக்கி கையசைத்தவாறு விமான நிலையத்தின் உள்ளே சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து பின்னர் செய்தியாளர்கள் அந்த முதியவரிடம் கேட்டபோது,, "தளபதி விஜய்யின் பாதுகாப்பிற்காக என் மீது துப்பாக்கி குறி வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் என்னை சுட்டிருந்தால்கூட, என் தளபதிக்காக அதை நான் சந்தோஷமாக ஏற்றிருப்பேன்" என்று தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜய் நடித்து வரும் 'ஜன நாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சத்யன் சூரியன் கவனிக்க, படத்தொகுப்பை பிரதீப் ஈ ராகவ் மேற்கொள்கிறார். இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியிலும், பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.