நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள புரியாத புதிர் திரைப்படத்தை வெளியிட இடைக் கால தடை விதித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு.
இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு (பெப்சி) பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் புதுமுக நடிகை காயத்ரி சங்கர் ஆகியோர் நடித்துள்ள புரியாத புதிர் படம் நாளை வெளியாக உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை தயாரிக்கும்போது ஒப்பனைக் கலைஞர்கள், ஓட்டுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றியுள்ளனர். இதன்படி தென்னிந்திய சினிமா மற்றும் டிவி சண்டை கலைஞர்கள் சங்கத்துக்கு 2.17 லட்சமும், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு மேலாளர்கள் சங்கத்துக்கு 1.67 லட்சமும், கலை இயக்குநர்கள் சங்கத்துக்கு 4.28 லட்சம் உள்பட பல சங்கங்களுக்கு சேர்த்து மொத்தமாக 22 லட்சத்து 13 ஆயிரத்து 51 வழங்கப்படவில்லை.
இந்தப்பணத்தை இதுவரை தரவில்லை. ஆனால் புரியாத புதிர் படத்தை தயாரித்துள்ள ஜெஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் உரிமையாளர் ஜெ.சதீஷ்குமார் படத்தை திரையிடுவதற்கு முன்பாக சம்பளத் தொகை அனைத்தையும் தருவதாக உறுதியளித்து இருந்தார். ஆனால் கூறியபடி இந்த தொகையை வழங்காமல் செப்டம்பர் 1 ஆம் தேதி இந்தப் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த தொகையை தராமல் இப்படம் வெளியிடப்பட்டால் ஏழைத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என அதில் சொல்லியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை 2-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தொழிலாளர்கள் அனைவரும் ஏழைகள். அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வழங்காமல் படத்தை திரையிடக்கூடாது என வாதிடப்பட்டது. ஆனால் அந்த பாக்கித் தொகைக்காக எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் இல்லை. ஆனாலும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைக் கருத்தில் கொண்டு இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க முகாந்திரம் உள்ளது. அதன்படி புரியாத புதிர் படத்தை வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என உத்தரவி்ட்டு, புரியாத புதிர் திரைப்பட தயாரிப்பாளர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.