சுதிப்டோ சென் இயக்கத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்திற்கு பெரிய வரவேற்பு இருப்பதாக கூறி படத்தின் நாயகி அடா சர்மா உற்சாகமாக உள்ளார்.
விபுல் ஷா தயாரிப்பில் சுதிப்டோ சென் இயக்கத்தில் இந்தியில் தயாரான படம் தி கேரளா ஸ்டோரி. கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக விளம்பரம் செய்யப்பட்ட இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கேரளாவை சேர்ந்த பெண்கள் முஸ்லீமாக மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ்ஐஎஸ் பயங்கராவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு எதிராக கேரளா உள்ளிட்ட மநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக படத்தை தடை செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால் இந்த படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த மே 5-ந் தேதி தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது. இந்த படம் சினிமா விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் இன்றுமுதல் கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே படத்தின் நாயகி அடா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தியேட்டர்களில் எழுந்து நின்று கைத்தட்டுகிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி படத்தை பாராட்டி பேசுகிறார். என்னுடைய நடிப்பை பாராட்டுகிறார்கள். பலரிடம் இருந்து ஹவுஸ்ஃபுல் என்று தகவல் வருகிறது. இது மிகப்பெரிய ஓப்பனிங். இதை கனவிலும் நினைக்கவில்லை. தி கேரளா ஸ்டோரி படத்தை பிரச்சாரப்படம் என்று சொல்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் வாக்குமூலத்தை கேட்டபிறகும் இப்படி வாதிடுகிறார்கள். தயவு செய்து ஐஎஸ்ஐஎஸ் (ISIS) மற்றும் பிரிடிஸ் (Brides) ஆகிய 2 வார்த்தைகளை தேடிப்பாருங்கள். அப்போதாவது எங்கள் திரைப்படம் உண்மை என்று உங்களுக்கு தெரியலாம் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“