/indian-express-tamil/media/media_files/2025/07/09/manirathnam-6-2025-07-09-11-06-30.png)
என்னடா இது, நாலு அடி போட்ருந்தா எல்லாம் சரியா இருக்கும்; மௌனராகம் படத்திற்கு வந்த விமர்சனம்; படம் பார்ப்பதை நிறுத்திய மணிரத்னம்!
மௌன ராகம், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1986-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிய இந்தப் படம், காதல், திருமணம், தனிப்பட்ட விருப்பங்கள் குறித்த ஒரு ஆழமான பார்வையை வழங்கியது. இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று, மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இசைஞானி இளையராஜாவின் இசை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் உள்ளன. பின்னணி இசை, கதைக்கு உயிரூட்டி, கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தது. ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், புதுமையான கோணங்கள் மற்றும் மென்மையான வண்ணங்களைப் பயன்படுத்தி படத்தின் உணர்வுகளை அற்புதமாகப் படம்பிடித்தார். குறிப்பாக, டெல்லியில் படமாக்கப்பட்ட காட்சிகள் படத்தின் காட்சி அழகுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தன.
மோகன், ரேவதி மற்றும் கார்த்திக் ஆகியோரின் நடிப்பு இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். ரேவதியின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு, மோகனின் அமைதியான நடிப்பு மற்றும் கார்த்திக்கின் துறுதுறுப்பான நடிப்பு ஆகியவை இன்றும் பேசப்படுகின்றன. மௌன ராகம், தமிழ் சினிமாவின் சிறந்த கிளாசிக் திரைப்படமாக கருதப்படுகிறது. இது ஒரு காதல் கதை மட்டுமல்ல, மன முதிர்ச்சி, புரிதல் மற்றும் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்புகள் பற்றிய ஆழமான செய்தியை வழங்கிய ஒரு கலைப் படைப்பு.
படம் வெளியான நேரத்தில், இயக்குநர் மணிரத்னம் சென்னைக்கு வெளியே ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் சென்றிருக்கிறார். படம் முடிந்ததும் வெளியே வந்த ஒரு ரசிகர், “படத்துல ரேவதியை மோகன் ஒரு அடி அடிச்சிருந்தா எல்லாம் சரியாயிருக்கும்!” என்று கோபத்துடன் கூறினாராம். இதைக் கேட்டதும் மணிரத்னம் திகைத்துப் போனார்.
அந்த ரசிகரின் கருத்துடன் தனக்கு உடன்பாடில்லை என்று கூறிய மணிரத்னம், திருமணப் பிரச்னைகளுக்கு அடிப்பதில் தீர்வு இல்லை என்பதைப் படத்தில் காட்ட நினைத்ததாகவும், ஆனால் அதை அவர் சரியாக ரசிகர்களுக்கு உணர்த்தவில்லையோ என்ற வருத்தம் ஏற்பட்டதாகவும் கூறினார். “என் அணுகுமுறை பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அதை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன்” என்று அவர் ஒப்பு க்கொண்டார். இந்த சுவாரசியமான அனுபவத்திற்குப் பிறகு, , “அதன்பின் தியேட்டருக்கே படம் பார்க்கப் போகவில்லை” என்றும் நகைச்சுவையாக மணிரத்னம் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.