/indian-express-tamil/media/media_files/2025/05/30/AtgVSGZDJEOl3W7xMeiu.jpg)
நம்ம பெஸ்ட் ப்ரண்டு, ஆன நான் பெரிய கம்பெனில தான் நடிப்பேன்; கால்ஷீட் கேட்ட டி.ஆர்.க்கு ரஜினிகாந்த் சொன்ன பதில்!
தமிழ் சினிமாவில் ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் டி. ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கல்லூரி மாணவர் கேரக்டரில் கேமியோவாக நடித்திருப்பார்.
தொடர்ந்து, வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி உள்ளிட்ட படங்களை இயக்கி சிறிய கேரக்டரில் நடித்து வந்தார் டி.ராஜேந்தர். அதன்பிறகு, 1983-ம் ஆண்டு அவரே தயாரித்து இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். இந்த படத்தில் அவர் நடித்த ஜெயின் ஜெயபால் கேரக்டர் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.
தொடர்ந்து தான் தயாரித்து இயக்கிய அனைத்து படங்களிலும் தானே ஹீரோவாக நடித்துள்ள டி.ராஜேந்தர், கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் என பல பணிகளை மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ள டி.ராஜேந்தர், ஒரு படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்துள்ளார்.
தன்னுடைய அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் செய்ய டி.ஆர். டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். 'உயிருள்ளவரை உஷா' படத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது பற்றி டி.ஆர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
ரஜினி குறித்து பேசிய டி.ஆர்., "ரஜினி மாதிரி பண்பான மனிதரைப் பார்க்கவே முடியாது. 'ஒரு தலை ராகம்' படத்திலிருந்தே நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். என்னுடைய 'ரயில் பயணங்களில்' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் சார் என்னைப் பாராட்டினார். அதைப் போல, ரஜினியும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார். பிறகு, இந்தக் காம்பினேஷனில், என்னுடைய வசனத்தில் ஒரு படம் செய்யலாம் என ரஜினி சொன்னார். அதைத் தொடர்ந்து, 'என்னுடைய தேதிகள் இப்போது இல்லை. நான் உங்களுக்கு கெஸ்ட் ரோல் செய்து தருகிறேன்' என்றார்.
நானும் இந்தக் கதையைத் தயார் செய்துவிட்டு அவரை டப்பிங் ஸ்டுடியோவில் சந்தித்தேன். கதை அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. கதையைக் கேட்டு முடித்ததும் என்னைக் கட்டிப்பிடித்தார். 'இந்தப் படத்தை நிச்சயமாகச் செய்யலாம்' என்றார். அதன் பிறகு அதில் வேறொரு விஷயம்தான் தடையாக வந்தது. 'பெரிய தயாரிப்பு நிறுவனத்தை வைத்துப் படத்தைத் தயாரிக்கலாம்' என்றார். அப்போது என்னுடைய படத்தை நானே சொந்தமாக ரிலீஸ் செய்ததால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது. எந்தப் பெரிய நிறுவனத்திற்குச் சென்றாலும் எனக்கும் அதே சம்பளம்தான் கிடைக்கும்.
ஆனால், இப்போது அந்தச் சம்பளம் போதாது. நஷ்டத்தை ஈடு செய்ய நானே படத்தைத் தயாரிக்க வேண்டும் என்றேன். அதற்கு அவர், 'நீங்களும் நானும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ், நம்முடைய நட்பு இதனால் முறிந்துவிடக் கூடாது. நான் பெரிய நிறுவனத்தில் மட்டும்தான் படம் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்' என்றார். எனக்காக அவருடைய கொள்கைகளை மாற்றிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் அப்போது அது நடக்கவில்லை.
'உயிருள்ளவரை உஷா' படத்தின் செயின் ஜெயபால் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தால் அது வேறு மாதிரியானதாக இருந்திருக்கும். பிறகு, நான் சில மாற்றங்களைச் செய்து நடித்தேன். இதுதான் உண்மை." என்று கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.