/indian-express-tamil/media/media_files/2025/09/18/gangai-amaran-ilaiyaraaja-2025-09-18-11-50-42.jpg)
வைரமுத்துதான் முக்கியம், நீ வெளிய போடா; தம்பி விரட்டி அடித்த இளையராஜா: கங்கை அமரன் உடைத்த உண்மை!
இளையராஜா-வைரமுத்து இருவரும் இணைந்து கொடுத்த பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் இன்றளவும் ஒலித்து கொண்டேதான் இருக்கிறது. முதல்முறையாக பாரதிராஜாவை சந்தித்த வைரமுத்து தனது 'திருத்தி எழுதாத தீர்ப்புகள்' என்ற கவிதை புத்தகத்தை பாரதிராஜாவிடம் நீட்டிவிட்டு முடிந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்கிறார். கவிதைகளை படித்த பாரதிராஜா வியந்துபோய் இளையராஜாவிடம் அறிமுகம் செய்கிறார். மெட்டுக்கு எழுதுவீர்களா?.. என்று கேட்டதற்கு முயற்சி செய்கிறேன் என்கிறார் வைரமுத்து. இளையராஜா மெட்டமைக்க உருவானதுதான் நிழல்கள் படத்தில் 'இதுவொரு பொன்மாலை பொழுது' என்ற பாடல். அப்போதே வைரமுத்துவை கட்டியணைத்து பாராட்டினார் இளையராஜா.
அதன்பிறகு பல ஆண்டுகள் இந்த இணை இசை உலகில் கோலோச்சியது. பின்னர் மற்ற இசை அமைப்பாளர் இசையிலும் பாடல்கள் எழுதிவந்தார் வைரமுத்து. இதனால் இளையராஜாவின் ஒளிப்பதிவுக்கு தாமதமாக வரத் தொடங்கினார். அன்றிருந்துதான் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது என்கின்றனர். அதுமட்டுமின்றி சில பாடல் வரிகளில் இளையராஜா தலையிட விரிசல் மேலும் வலுப்பெற்றது.
வைரமுத்து எப்போதும் ஒரு படத்தில் முழு பாடல்களையும் அவரே எழுதும் பழக்கம் உடையவர். இந்த நிலையில் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் ஒரு பாடலை வாலியை வைத்து எழுத வைக்கிறார் இளையராஜா. இது மீண்டும் இருவருக்குள்ளும் விரிசலை அதிகரித்தது. அதன்பின் பாலசந்தர் இயக்கிய 'புன்னகை மன்னன்' படத்தில் முழுவதுமாக பிரிந்தது இந்த இணை.
தமிழ் சினிமாவின் இரு மாபெரும் ஆளுமைகளான இசைஞானி இளையராஜா-கவிப்பேரரசு வைரமுத்துவின் பிரிவுக்கு உண்மையான காரணம் என்ன? என்பது குறித்த தகவல்களை இளையராஜாவின் தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் வாவ் தமிழா யூடியூப் நேர்காணலில் கூறி உள்ளார்.
கங்கை அமரன் தனது நேர்காணலில், வைரமுத்து திரையுலகில் பாடல்கள் எழுதத் தொடங்கிய பிறகு, தனக்கு இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும், தான் ஓரங்கட்டப்பட்டதாகவும் உணர்ந்ததாகக் கூறுகிறார். மேலும், வைரமுத்துவின் கவித்திறமையை பாராட்டிய அவர், புதிய மற்றும் அழகான தமிழ்ச் சொற்களைப் பாடல்களுக்கு கொண்டு வந்த பெருமை வைரமுத்துவுக்கு உண்டு என்றும் குறிப்பிடுகிறார்.
இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையிலான பிளவுக்குக் காரணம், வைரமுத்துவின் ஆணவப் பேச்சுதான் என்று கங்கை அமரன் குற்றம் சாட்டினார். ஒரு மேடையில் பேசிய வைரமுத்து, "நான் வந்த பிறகுதான் இளையராஜாவின் இசை முகவரி தெரிய ஆரம்பித்தது" என்று கூறியதாகவும், இது இளையராஜாவை மிகவும் வருத்தப்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
வைரமுத்துவை "கர்வம் பிடித்தவர்" என்று விமர்சித்த கங்கை அமரன், இயக்குனர் பாரதிராஜா "எனக்கு இளையராஜா கூட தேவையில்லை, வைரமுத்து இருந்தா போதும்" என்று கூறியபோது தனக்கு கோபம் வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், பாரதிராஜாவின் அந்தப் பேச்சு தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.