/indian-express-tamil/media/media_files/2025/06/04/seof2Ljxcutqp8Kfpsjf.jpg)
38 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை நடிகர் கமல்ஹாசனும், இயக்குநர் மணிரத்னமும் கைகோர்த்துள்ள "தக் லைப்" திரைப்படம், நாளை (ஜூன் 5) திரைக்கு வர தயாராக உள்ளது. நாயகன் படத்திற்குப் பிறகு இந்த பிரம்மாண்ட கூட்டணி அமைந்திருப்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தற்போதைய முன்பதிவு நிலவரங்கள் வேறுவிதமாகவே அமைந்துள்ளன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
"தக் லைஃப்" படத்தின் தற்போதைய முன்பதிவு வசூல் இந்தியா முழுவதும் ரூ 3.29 கோடியாக உள்ளது. இதில், தமிழ் பதிப்பு ரூ 2.89 கோடி வசூலித்து முன்னணியில் உள்ளது. தெலுங்கு பதிப்பு ரூ 26 லட்சமும், இந்தி பதிப்பு ரூ 14 லட்சமும் ஈட்டியுள்ளன. தமிழ் பதிப்பில், 2D வடிவம் ரூ 2.84 கோடியும், ஐமேக்ஸ் (IMAX) 2D ரூ 5 லட்சமும், 4DX ரூ 10,850 ஐயும் வசூலித்துள்ளது.
இது குறித்து, சானிக்லிங் தகவலின்படி, நாளை (வியாழக்கிழமை) மொத்தமாக முன்பதிவு மற்றும் ப்ளக் இருக்கைகளுடன் சேர்த்து "தக் லைஃப்" ரூ 9.6 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கணிசமான எண்ணிக்கையாக இருந்தாலும், கமல்ஹாசனின் முந்தைய இரண்டு படங்களான ஷங்கரின் "இந்தியன் 2" (ரூ 17.9 கோடி முன்பதிவு) மற்றும் லோகேஷ் கனகராஜின் "விக்ரம்" (ரூ 15.3 கோடி முன்பதிவு) ஆகியவற்றை விட மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னத்தின் "பொன்னியின் செல்வன்" முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் முன்பதிவு வசூலையும் "தக் லைப்" எட்டவில்லை. "பொன்னியின் செல்வன் 1" ரூ 18.95 கோடியும், "பொன்னியின் செல்வன் 2" ரூ 11 கோடியும் முன்பதிவு வசூலித்திருந்தன.
"தக் லைப்" படத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக, கர்நாடகாவில் நாளை இத்திரைப்படம் வெளியாகவில்லை. சென்னை விழாவில் கமல்ஹாசன் பேசிய கருத்துகள் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. "கன்னட மொழி தமிழிலிருந்து பிறந்தது" என்ற அவரது கருத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் (KFCC) கடும் எதிர்ப்புக்குள்ளானது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கும் வரை திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடப்படாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. ஆனால், கமல் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
இந்த விவகாரம் குறித்து, கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், படத்தின் வெளியீட்டுக்கு பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கர்நாடக உயர் நீதிமன்றம், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்தது. "ஒரு சிறிய மன்னிப்பு இந்தச் சூழ்நிலையை சரி செய்திருக்கும். கருத்து சுதந்திரம் ஒருவரின் உணர்வுகளை, குறிப்பாக ஒரு குழுவின் உணர்வுகளை காயப்படுத்தும் அளவிற்கு இருக்க கூடாது" என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், "பேசப்பட்ட வார்த்தைகளைத் திரும்பப் பெற முடியாது, அதற்கு மன்னிப்பு மட்டுமே கேட்க முடியும். நீங்கள் சிதறிய முட்டையை மீண்டும் சேர்க்க முடியாது" என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. இருப்பினும், கமல்ஹாசன் தரப்பு வழக்கறிஞர், அவர் "தீங்கு எண்ணத்துடன்" கருத்துகளைத் தெரிவிக்கவில்லை என்றும், எனவே மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்றும் வாதிட்டார். "இது அகங்காரம் அல்ல" என்று அவர் வாதிட்டு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் வரை கர்நாடகாவில் படத்தின் திரையிடலை வலியுறுத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.
மேலும், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவின் அடுத்த விசாரணை ஜூன் 10 அன்று நடைபெறும் என்றும், படத்தின் வெளியீட்டுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் குறித்த கருத்தைத் தொடர்ந்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் பரவலான போராட்டங்கள் மற்றும் புறக்கணிப்பு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் "தக் லைப்" பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிறது. ஆனால், முன்பதிவு நிலவரம் மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியவை படத்தின் முதல் நாள் வசூலை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சவால்களைத் தாண்டி "தக் லைப்" பாக்ஸ் ஆபிஸில் சாதிக்குமா என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.