சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் என்ற பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரமேஷ். 42 வயதான இவர் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக செயல்பட்டுவந்தார்.
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சித்ரா (42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சித்ரா பெரியமேடு அல்லிக்குளத்தில் வசித்து வருகிறார். இரண்டாவது மனைவி இன்பவள்ளி, கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷுடன் கே.பி. பார்க் குடிசை மாற்றுவாரிய வீட்டில் வசித்துவருகிறார்.
ரமேஷ், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்று வந்தார். பொங்கல் தினத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்திலும் ஒரு சிறிய காட்சியில் தோன்றியிருந்தார். வரவிருக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் நடனம் ஆடியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரமேஷிற்கு இன்று (ஜன.27) பிறந்தநாள் ஆகும். அப்போது, புளியந்தோப்பில் உள்ள குடியிருப்பு பகுதியின் 10ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக ரமேஷின் இரண்டாவது மனைவிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
ரமேஷின் மரணம் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரமேஷ் சினிமா பாடல்களுக்கு நடனமாடி அதனை டிக் டாக்கில் பதிவேற்றி ஏராளமான ரசிகர்களை பெற்றிருற்தார்.
அவரின் தற்கொலை மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
-
தற்கொலை தீர்வல்ல
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/