New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/14/NaV3bbx3QYnaXNggOLHK.jpg)
சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தில் பக்தி பாடல் பயன்படுத்தியதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும், இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. 'தில்லுக்கு துட்டு' திரைப்பட வரிசையில் 4-வது பாகமாக வெளியாகும் இந்த படத்தை, எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் சந்தானத்துடன் கீர்த்திகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கிஸ்ஸா 47' என்ற ராப் பாடலில் புகழ்பெற்ற பக்தி பாடலான 'ஸ்ரீனிவாச கோவிந்தா' வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் மற்றும் அரசியல்வாதியான பானுபிரகாஷ் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், ஏன் இந்துக்களின் உணர்வுகள் மட்டும் தொடர்ந்து புண்படுத்தப்படுகின்றன? நாங்கள் அவர்களுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளோம். ஸ்ரீனிவாச கோவிந்தா பாடல் ஆன்லைனிலும், திரைப்படத்திலும் இருந்து நீக்கப்படாவிட்டால், நாங்கள் அவதூறு வழக்கு தொடர்ந்து 100 கோடி ரூபாய் இழப்பீடு கோருவோம்" என்று கூறியுள்ளார்.
'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தில் ஸ்ரீனிவாச பெருமாளை போற்றும் புகழ்பெற்ற பக்தி பாடலான 'ஸ்ரீனிவாச கோவிந்தா' ராப் பாடலின் ஒரு பகுதியில் பயன்படுத்தப்பட்டிருப்பது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். இந்த பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.