கோவையைச் சேர்ந்த டி.டி.எஃப் வாசன், யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது பைக் அனுபவங்கள் குறித்து பதிவேற்றி வந்தார். குறிப்பாக அதிவேகமாக பைக்கில் சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் பதிவேற்றினார். அவரது சேனலை பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை என ஏரளமானோர் பின்தொடர்ந்தார்கள்.
இந்நிலையில், யூடியூப் பிரபலமாக வலம் வந்த டி.டி.எஃப் வாசன் காஞ்சிபுரம் அருகில் ஒரு விபத்தில் சிக்கினார். அதிவேகமாக பைக் ஒட்டி போக்குவரத்து விதிகளை மீறியதற்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவருடைய வழக்கை விசாரித்த கோர்ட், அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 வருடங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.
இதன்பிறகும் அவர் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வந்தார். குறிப்பாக, திருப்பதி கோயிலில் பக்தர்களை பிராங்க் செய்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பெரும் சர்ச்சையாகிய நிலையில், டி.டி.எஃப் வாசன் மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே, டி.டி.எஃப் வாசன் இயக்குநர் செல் அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கூட வெளியானது. இந்த சூழலில், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டி.டி.எஃப் வாசன் நீக்கப்பட்டதாக அப்படத்தின் இயக்குநர் செல் அம் தெரிவித்தார். அத்துடன் படத்தின் புதிய ஹீரோ குறித்த அறிவிப்பு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், 'மஞ்சள் வீரன்' படத்தில் டி.டி.எஃப் வாசனுக்கு பதிலாக நடிகர் கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் நடிகர் கூல் சுரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
'மஞ்சள் வீரன்' பட பூஜைக்குப் பிறகு கூல் சுரேஷ் பேசிய வீடியோ ஒன்றும், புகைப்படங்களும் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“