TV Actors who committed Suicide Tamil News : ஒருகாலத்தில் வீட்டிலிருக்கும் பெண்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது 'சின்னத்திரை நெடுந்தொடர்கள்'. அப்பொழுதெல்லாம் பெரும்பாலும் பெண்களையே மையமாக வைத்து இந்த சீரியல்கள் எடுக்கப்பட்டன. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் ஈர்க்கும் வகையில் விதவிதமான கான்செப்டுகளில் சுவாரசியமான பல நெடு மற்றும் குறுந்தொடர்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகின்றன.
பெரிய திரை பிரபலங்களின் வரவேற்ப்பிக்கு கொஞ்சமும் சலித்ததல்ல சின்னத்திரை நட்சத்திரங்களுக்கான ரசிகர்களின் வரவேற்பு. சொல்லப்போனால், சின்னத்திரை நட்சத்திரங்களை, பெரும்பாலான மக்களின் வீடுகளில் அவர்களின் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே கருதுகின்றனர். இதனாலே அவர்கள் தற்கொலை என்ற முடிவை எடுக்கும்போது, அதனை ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் மறுக்கின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் எண்ணிலடங்கா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது விஜே சித்ராவின் தற்கொலை சம்பவம். சின்னத்திரை நட்சத்திரங்கள் இதுபோன்று தற்கொலை செய்துகொள்வது புதிதல்ல.
வைஷ்ணவி
'அண்ணி', 'முகூர்த்தம்' உள்ளிட்ட சீரியல்கள், 'கொண்டாட்டம்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர், 'விசில்', 'பாபா', 'மௌனம் பேசியதே' உள்ளிட்ட திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் வைஷ்ணவி. இவர், 2006-ம் ஆண்டு ஏப்ரலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னதிரையில் தன்னுடன் நடித்த ஆண் நண்பர் தேவ் ஆனந்த் வைஷ்ணவியை இரண்டாவது மனைவியாக இருக்க வற்புறுத்தியதால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது.
ஷபர்ணா
சன் டிவியின் 'பாசமலர்', விஜய் டிவியின் 'புதுக்கவிதை' உள்ளிட்ட பல தொடர்களிலும் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்த ஷபர்ணா, 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தன் அபார்ட்மென்ட்டில் கை அறுத்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து மூன்று நாள்களுக்கு பிறகே நிர்வாணமாகவும் அழுகிய நிலையிலும் ஷபர்ணாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. திரைத்துறையில் சரியான வாய்ப்பு கிடைக்காததாலும் அப்போது காதலித்துக்கொண்டவரின் நடவடிக்கையால் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டார் என்று தற்கொலை பதிவை ஷபர்ணா எழுதி வைத்ததாகக் கூறப்படுகிறது.
நகைச்சுவை நடிகை ஷோபனா
சன் டிவியின் 'மீண்டும் மீண்டும்' சிரிப்பு மூலம் பரீட்சயம் ஆனவர் ஷோபனா. 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர், 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உடல் நலக் குறைபாடு காரணமாக ஷூட்டிங் போகாமல் கோட்டூர்புரத்தில் இருக்கும் தன் வீட்டில் இருந்துள்ளார். தன் தாய் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் சென்று திரும்புவதற்குள், தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்கிறார் ஷோபனா. திரைத்துறையில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் கூறின.
ஸ்ரவானி
மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் ஸ்ரவானி. ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்த இவர், 8 வருடங்களாகத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். இந்நிலையில் திடீரென இரவு தன் வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டிக்டாக் மூலம் அறிமுகமான தேவராஜ் என்கிற நபர், தன் சகோதரியிடம் பணம் கேட்டுத் துன்புறுத்தியதாக ஸ்ரவானியின் சகோதரர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தேவராஜ் உள்ளிட்ட 3 பேரை காவல்துறை கைது செய்தது.
சாய் பிரசாந்த்
தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமல்ல, 'மானாட மயிலாட', 'ஜோடி நம்பர் ஒன்' உள்ளிட்ட நடன ரியாலிட்டி ஷோ, 'நேரம்', 'தெகிடி', 'வடகறி' உள்ளிட்ட சில திரைப்படங்கள் ஆகியவற்றிலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் தனிமையின் காரணமாக தன் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் தன் மனைவி மற்றும் மகளுக்கு எழுதிய உருக்கமான கடிதம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
முரளி மோகன்
ஹார்லிக்ஸ் மாமா என்று அழைக்கப்படும் முரளி மோகன், சின்னதிரை நடிகர், பெரியத்திரை நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். சன் டிவியின் 'தென்றல்', 'வம்சம்' உள்ளிட்ட தொடர்களிலும், 'மின்னலே', 'பாய்ஸ்', 'சிவாஜி', 'ரெண்டு' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்த போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரைத்துறை வாய்ப்புகள் இல்லாததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.