நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா, கடைசியாக சாவு கபுரு சல்லகாவில் நடித்தார், ராஜா விக்ரமார்கா என்ற உளவு சார்ந்த திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. அறிமுக இயக்குனர் ஸ்ரீ சாரிபலி இயக்கியிருக்கும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சாய் குமார், தணிகெல்ல பரணி, பசுபதி, ஹர்ஷ வர்தன், சுதாகர் கோமகுலா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, 29 வயதான நடிகர் கார்த்திகேயா தனது திரைப்படங்கள், காதல் வாழ்க்கை மற்றும் வலிமை திரைப்படம் பற்றி பேசுகிறார். அவற்றிலிருந்து சில பகுதிகள் இதோ...
ராஜா விக்ரமார்கா படத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றி கூறுங்கள்?
காமிக் டைமிங்கை மையமாக வைத்து இதுபோன்ற கேரக்டரை இதுவரை நான் செய்ததில்லை. படத்தில் ஸ்டைலிஷ் என்ஐஏ ஏஜென்டாக நடிக்கிறேன். இது ஒரு உன்னதமான படமாக இருக்கும்.
இந்தப் படம் ஏதேனும் உளவுத்துறை சார்ந்த த்ரில்லர் நிகழ்வுகளில் இருந்து எடுக்கப்பட்டதா?
நேர்மையான கதை சொல்லும் முயற்சிதான் இப்படம். இது நகைச்சுவை மற்றும் ஆக்ஷனுடன் பார்வையாளர்களை ஈர்க்கும்.
ராஜா விக்ரமார்காவின் கதையில் உங்களை உற்சாகப்படுத்தியது எது?
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்ஷன் படம் இது. இயக்குனரின் பார்வையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது ஒரு தனித்துவமான கதை பாணி தேவைப்படும் ஒரு திரைப்படம் மற்றும் இயக்குனர் ஸ்ரீ சாரிபள்ளி அதனை தெளிவுடன் கையாண்டுள்ளார்.
வலிமை படத்தில் அஜித்குமாருடன் பணிபுரிந்தது எப்படி இருந்தது?
வலிமை செட்டில் எனது படப்பிடிப்பின் முதல் நாளில் நான் மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன். என் மொழி பிரச்சனை மற்றும் அஜீத் குமாருக்கு இருக்கும் நட்சத்திர மதிப்பு காரணமாக நான் பதட்டமாக இருந்தேன். ஆனால், முதல் உரையாடலிலேயே, அவர் ஒரு நேர்மறையான அதிர்வைக் கொடுத்து, என்னை இலகுவாக்கினார். செட்டில் உள்ள அனைவரையும் முக்கியமானவர்களாகவும் வசதியாகவும் உணர வைப்பார். திரையில் எனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த இது எனக்கு பெரிதும் உதவியது.
ராஜா விக்ரமார்காவில் காமெடி, ஆக்ஷன் இரண்டையும் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு எது எளிதாக இருந்தது?
இதற்கு முன் எனது படங்களில் ஆக்ஷன் காட்சிகள் செய்துள்ளேன். அதனால், நான் அதில் நம்பிக்கையுடன் இருந்தேன், ஆனால் நான் நகைச்சுவையுடன் இணைக்க முடியுமா என்று பார்க்க விரும்பினேன்.
உங்களின் சமீபத்திய தோல்விப் படங்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
எனது முந்தைய படங்களில் செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இருப்பினும், என்னுடைய ஒவ்வொரு புதிய படத்திலும் தவறுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கலாம். எனது தோல்விகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவை நான் சிறந்த நடிகராக வர உதவின.
உங்கள் வரவிருக்கும் திரைப்படங்கள் பற்றி கூறுங்கள்?
யுவி கிரியேஷன்ஸ், ஸ்ரீதேவி மூவிஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். மேலும் ஒரு புது டைரக்டரோட ப்ராஜெக்ட் இருக்கு.
ராஜா விக்ரமார்க்காவின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் உங்கள் வருங்கால மனைவி லோஹிதாவிடம் ப்ரொபோஸ் செய்தது பற்றி...
நாங்கள் நீண்ட காலமாக உறவில் இருந்தபோதிலும், நான் அவளிடம் சரியாக ப்ரொபோஸ் செய்ததில்லை. அதனால், அவளுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளும் வகையிலும், எங்கள் திருமணத்திற்கு முன் ஒரு ஆச்சரியத்தையும் கொடுக்க நினைத்தேன் என்று கார்த்திகேயா கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil