நடிகை வனிதா விஜயகுமார் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி குறித்து புது அப்டேட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் விஜய் உடன் சந்திரலேகா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. பின்னர் சில திரைப்படங்களில் நடித்த வனிதா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். முதல் 2 திருமணங்களில் இருந்து வெளியேறிய வனிதா, பின்னர் சினிமா, சின்னத்திரை என மீண்டும் லைம்லைட்டிற்கு வந்தார். இந்தநிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு விஷூவல் எஃபெக்ட் டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் திருமணமான சில நாட்களிலே, அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பீட்டர் பாலை வனிதா பிரிந்தார்.
தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வரும் வனிதா, அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் வனிதா நடத்தி வருகிறார்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வனிதா மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதனைத்தொடர்ந்து தன்னுடைய மகளான ஜோவிகாவையும் அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறக்கினார். தொடர்ந்து தன்னுடைய மகள் ஜோவிகாவை எப்படியாவது ஹீரோயினாக்க வேண்டும் என போராடி வருகிறார்.
முன்னதாக விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆனார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகம் தோன்ற ஆரம்பித்தார்.
இந்தநிலையில், விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5ஆவது சீசனை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வனிதாவிடம், குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஜோவிகா கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு வனிதா அளித்த பதில் இப்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஜோவிகா கலந்து கொள்வாரா என்று இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, "ஜோவிகா இப்போ ரொம்பவே பிஸியா இருக்கா.. டேட்ஸ் (தேதிகள்) இல்ல. ஆனால் என்னை எதிர்பார்க்கலாம்," என்று கூறி இருக்கிறார்.
ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒருமுறை போட்டியாளராக பங்கேற்றவர் மீண்டும் போட்டியாளராக கலந்து கொள்ள முடியாது என்ற விதி இருக்கும் நிலையில், வனிதா என்னை எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டிருப்பதால் இந்த நிகழ்ச்சியில் வனிதா எப்படி கலந்துக் கொள்ளப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சில ரசிகர்கள் வனிதா தொகுப்பாளராக களமிறங்கலாம் என்று கூறி வருகின்றனர். அதேநேரம் ஏற்கனவே ரக்சன் மற்றும் மணிமேகலை தொகுப்பாளர்களாக இருப்பதால், வனிதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.