வாரிசு படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ராஜ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் சரத்குமார் பிரகாஷ்ராஜ், குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரமோ வைரலாகி வரும் நிலையில், தற்போது வாரிசு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாலிவுட் வாய்ப்பு பெற்ற காந்தாரா பட இயக்குனர்
கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் காந்தாரா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என 4 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான காந்தாரா பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டிக்கு பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், தற்போது பாலிவுட் இயக்குனரிடம் இருந்து நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளதாக ரிஷப் ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.
மகள் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதன்பிறகு வை ராஜா வை, என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 2015-ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு ஆவணப்படம் மற்றும் ஆல்பம் பாடல்களை இயக்கி வந்த ஐஸ்வர்யா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் விஷ்னு விஷால் விக்ராத் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ள நிலையில், லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.இந்த படத்திற்கு லால் சலாம் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வில்லனாக நடிக்கும் வடிவேலு?
தமிழ் சினிமாவின் காமெடி புயல் வடிவேலு தனது 35 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், காமெடி குணச்சித்திரம் பாடகர் என வலம் வந்த நிலையில், தற்போது இவர் வில்லன் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய படம் ஒன்றில் அவரை வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. லொள்ள சபா ராம்பாலா அடுத்து இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடிக்கவே வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஷூட்டிங் நிறுத்தம்?
பிரின்ஸ் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் மாவீரன். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனருக்கும் நடிகருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.