கோபி நயினார் இயக்கத்தில், ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் உருவாகியுள்ள 'மனுசி' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டதை எதிர்த்து அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான வெற்றிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 2, 2025) நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
வெற்றிமாறன் தாக்கல் செய்த மனுவில், ஒரு பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படுவதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தனது 'கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி' (Grassroot Film Company) தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தின் உள்ளடக்கங்கள் அரசை தவறாக சித்தரிப்பதாகவும், மெயின்ஸ்ட்ரீம் கம்யூனிசத்தை இடதுசாரி கம்யூனிசத்துடன் குழப்பிக் கொள்வதாகவும் கூறி இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC), கடந்த செப்டம்பர் 2024-ல் மறுத்துவிட்டதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
தணிக்கை சான்றிதழ் மறுக்கப்படுவதற்கு முன் தனது தரப்பு விளக்கம் அளிக்க தனக்கு எந்த ஒரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்றும், தணிக்கை குழு உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட வெற்றிமாறன், மார்ச் 29, 2025 அன்று மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய ஒரு நிபுணர் குழுவை அமைத்து திரைப்படத்தை மீண்டும் ஆய்வு செய்யுமாறு தணிக்கை வாரியத்திற்கு ஒரு கோரிக்கை மனுவை சமர்ப்பித்ததாகக் கூறியுள்ளார்.
தணிக்கை வாரியம் தனது கோரிக்கை மனுவை பரிசீலித்து, நிபுணர் குழுவால் திரைப்படத்தை மீண்டும் ஆய்வு செய்த பின்னர் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று அவர் கோரினார். திரைப்படத்தின் ஏதேனும் காட்சிகள் அல்லது வசனம் ஆகியவை கருத்து சுதந்திரத்தின் வரையறைகளுக்குள் வராவிட்டால், திரைப்படத்தை திருத்தவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
'மனுசி' திரைப்படத்தின் டிரெய்லரை, ஏப்ரல் 2024-இல் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் பெண்ணிடம், காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வது போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றிருந்தன. இந்த டிரெய்லருக்கு விமர்சன ரீதியான வரவேற்பு கிடைத்தது.
ஆண்ட்ரியா தவிர, நாசர், தமிழ், ஹக்கிம் ஷா மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்திற்காக அறியப்பட்ட இயக்குநர் கோபி நயினார் இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.