/indian-express-tamil/media/media_files/2025/08/25/vada-chennai-movie-2025-08-25-12-45-36.jpg)
ராஜன் மரணம், அன்பு எழுச்சி; ஒரே ஃபிரேமில் காட்டிய வெற்றி மாறன்: வட சென்னை படத்தில் இதை கவனிச்சிங்களா?
இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான ‘வட சென்னை’ திரைப்படம், 80-களின் வட சென்னை மக்களின் வாழ்வியலையும், ஹார்பரை சுற்றியுள்ள அவர்களின் போராட்டங்களையும் ஆழமாகப் பதிவு செய்த ஒரு முக்கியமான படைப்பு. தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி எனப் பல நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு இந்த படத்தின் வெற்றிக்கு வலுசேர்த்தது.
‘வட சென்னை’ கதை, ராஜன் (அமீர்) கதாபாத்திரத்தில் இருந்துதான் தொடங்குகிறது. தனது மக்களுக்காகப் போராடி, அதிகாரப் போட்டிக்குள் இழுக்கப்பட்டு, நண்பர்களாலேயே கொல்லப்படும் ஒரு தாதாவாக ராஜன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. “தம்மத்தூண்டு ஆங்கர்தான்டா அம்மாம்பெரிய கப்பலையே தாங்குது” போன்ற வசனங்கள் மூலம், ராஜனாக அமீர் தன் நடிப்பில் வாழ்ந்திருந்தார்.
படத்தில், கேரம் விளையாட்டில் சாதிக்க நினைக்கும் அன்பு (தனுஷ்), ராஜனால் ஊக்குவிக்கப்பட்டு அவரது நம்பிக்கைக்குரிய நபராக மாறுகிறார். ராஜன், அன்புவின் வாழ்வில் ஒரு வழிகாட்டியாகவும், பாதுகாப்பாகவும் இருந்தார்.
படத்தில், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், ஒரு காட்சியில் வெற்றிமாறனின் மேதைமையை காட்சிப்படுத்தியிருப்பார். சிங்காரவேலன் நினைவு மண்டபம் திறக்கப்படும்போது, ஒரு சிறிய ஜன்னலில் ராஜனின் முகம் தெரியும். அந்த ஜன்னல் பார்ப்பதற்கு ஒரு புல்லட் டார்கெட் (bullet target) போல இருக்கும். இது, ராஜன் இலக்கிற்குள் வந்துவிட்டார் என்பதை உணர்த்துவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அடுத்த சில காட்சிகளில், ராஜன் தன்னுடன் இருந்தவர்களாலேயே துரோகம் செய்யப்பட்டு குத்திக் கொல்லப்படுவார்.
ராஜனின் மரணத் துக்கம் நடக்கும்போது, அதேபோன்ற ஒரு ஜன்னலில் இருந்து அன்பு (தனுஷ்) பார்த்துக் கொண்டிருப்பார். அந்த ஜன்னலும் ஒரு டார்கெட் போலத் தோன்றும். இந்த ஒரு காட்சி மூலம், ராஜனின் மரணமும், அதன் விளைவாக அன்புவுக்குள் ஏற்படும் எழுச்சியும் ஒரே நேரத்தில் காட்டப்பட்டிருக்கும். ராஜனின் மரணம், அன்புவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்து, அவரைப் பிற்காலத்தில் ஒரு போராளியாக மாற்றுகிறது.
இன்று ஒரு தகவல் ❤️ pic.twitter.com/DLpWUJUURA
— Jesse Pinkman ❤️ (@Putinism7) August 24, 2025
படத்தின் வெற்றிக்கு, அதன் வசனங்களும், நடிகர் வேல்ராஜின் யதார்த்தமான ஒளிப்பதிவும் பெரிதும் உதவியது. சந்தோஷ் நாராயணனின் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரூட்டின. வட சென்னை மக்களின் வாழ்க்கையை மிக நெருக்கமாகக் காட்டிய இந்தப் படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.