நடிகை நயன்தாரா நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்திற்கான பாடல் வரிகளை எழுதியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத் ரவிசந்தர்.
தென் திரையுலகில் அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகை நயன்தாரா தற்போது நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார், லைகா புரொடக்ஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது.
இதுவரை இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. முதலாவதாக, ‘எதுவரையோ’ என்ற பாடல் சில அறிமுக காட்சிகளுடன் வெளியானது. அந்தப் பாடலை, விவேக் மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் இணைந்து எழுதினர். இதனைப் பாடகர் ஷான் ரோல்டன் பாட, இடையில் வரும் வசனங்களைக் கவுதம் மேனன் பேசியிருப்பார்.
பின்னர் இரண்டாவதாக, ‘கல்யாண வயசு’ என்ற பாடலும் வெளியானது. இந்தப் பாடலின் அறிமுக வீடியோவை இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார். நடிகர் சிவகார்த்திகேயன் கல்யாண வயசு பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். சிவகார்த்திகேயன் எழுதிய முதல் பாடல் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படத்தின், 3 - வது பாடலை இன்று இரவு 7 மணிக்கு அனிருத் வெளியிடத் தயாராக உள்ளார். ‘ஒரே ஒரு ஊரில்’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதில் ‘ஒரே ஒரு ஊரில், ஒரே ஒரு வீடு... ஒரு அடிகூட தாங்காது’ என எழுதியுள்ளார். இதன் இசையமைப்பு வீடியோவை அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
June 2018
விக்னேஷ் மற்றும் நயன்தாரா, இருவரும் இளம் காதல் பறவைகளாக உலகம் முழுவதும் உலா வரும் நிலையில், தற்போது விக்னேஷ் எழுதியுள்ள இந்தப் பாடல் வரிகள், வெறும் படத்திற்கானதா அல்லது காதலி நயன்தாராவுக்கு எழுதிய காதல் கடிதமா என்று பலரும் கேலி செய்து வருகின்றனர்.