/tamil-ie/media/media_files/uploads/2023/01/Vijay-Antony-1-1.jpg)
இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார் என்ற செய்திகள் வெளியான நிலையில், தாடை, மூக்கில் காயம் ஏற்பட்டதாகவும் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பால் அடுத்து அதன் இரண்டாம் பாகம் சலீம் என்ற படத்தில் நடித்தார்.
இதைத் தொடர்ந்து, இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படம் 2016-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படம் விஜய் ஆண்டனியின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளா என்று செய்திகள் வெளியானது. தற்போது விஜய் ஆண்டனி சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி ட்விட்டரில் தனது உடல்நிலை குறித்து தெரிவித்துள்ளார். அதில், “அன்புள்ள நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில், தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்திலிருந்து நான் பாதுகாப்பாக குணமடைந்து வருகிறேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன். விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் என் உடல்நிலை குறித்த அக்கறைக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.