தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அதே சமயம் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவர், தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜன நாயகன்' திரைப்படம் தான் அவரது கடைசி படமாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Vijay faced pressure from locals to choose Tamil director for final film’, reveals Gopichand Malineni
இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான கோபிசந்த் மலினேனி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று புதிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில், நடிகர் விஜய் முதலில் தனது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அதுதான் விஜய்யின் கடைசி படமாக இருக்க இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
தெலுங்கு ஊடகமான தெலுங்கு ஒன்னுக்கு அளித்த பேட்டியில் கோபிசந்த் மலினேனி கூறுகையில், "வீர சிம்ஹா ரெட்டி படத்தை முடித்தவுடன், நான் ஒரு கதையை தயார் செய்து விஜய் சாருக்கு கூறினேன். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஒரே சந்திப்பில் அவர் ஒப்புக்கொண்டார் என்று கூறிய அவர், திடீரென விஜய் தனது முடிவை மாற்றிக்கொண்டதற்கான காரணத்தையும் கோபிசந்த் மலினேனி விளக்கினார்.
நாங்கள் பட அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருந்த சமயத்தில், விஜய் அரசியலுக்கு வருவது உறுதியானது. அப்போது, அவரைச் சுற்றி இருந்தவர்கள், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பதால், அரசியலுக்கு வருவதற்கு முன்பு கடைசி படமாக, ஒரு தமிழ் இயக்குனரின் படத்தில் நடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். ஏற்கனவே அவர் ஒரு தெலுங்கு இயக்குனரான வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்திருந்தார்.
இதன் காரணமாக மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் பணியாற்றுவதற்கு உள்ளூர் மக்களிடமிருந்து அவருக்கு ஒருவித அழுத்தம் இருந்தது. இதன் காரணமாகவே அவர் 'ஜன நாயகன்' படத்தை தேர்ந்தெடுத்தார்" என்று கோபிசந்த் மலினேனி தெரிவித்தார்.
மேலும், விஜய் நடிக்க மறுத்த அந்த கதையை முதலில் ஜூனியர் என்.டி.ஆரிடம் கூறியதாகவும், ஆனால் அவர் அந்த கதை மிகவும் "வெயிட்டானதாக" இருந்ததால், தான் ஒரு பொழுதுபோக்கு நிறைந்த கதையை எதிர்பார்த்ததாக கூறியதாகவும் கோபிசந்த் மலினேனி குறிப்பிட்டுள்ளார்.
'ஜன நாயகன்' திரைப்படத்தில் விஜய் உடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு, மோனிஷா பிளஸ்ஸி மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்த திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.