நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது மர்மநபர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி பாதை வகுத்து தனித்தன்மையுடன் செயல்பட்டவர் விஜயகாந்த். திரைபட படப்பிடிப்பு பகுதியில் தான் சாப்பிடும் உணவைத்தான் மற்ற அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதை உறுதி செய்த விஜயகாந்த், நடிகர் சங்க கடனை அடைத்தது, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பொன்விழா எடுத்தது என அனைவரும் வியக்கத்தக்க பல செய்லகளை செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், அரசியல் திரைத்துறை என எதிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்த நிலையில், கடந்த டிசம்பர் 28-ந் தேதி காலை மரணமடைந்தார். அவரது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில் செந்தூரப்பாண்டி படத்தின் மூலம் விஜயின் திரை பயணத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ள விஜயகாந்த் மறைவுக்கு விஜய் வருவரா என்ற கேள்வி எழுந்த நிலையில், டிசம்பர் 28-ந் தேதி இரவு 10 மணியளவில் விஜய் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேமுதிக அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் சிந்திய விஜய், பிரேமலதாவிடம் பேசினார்.
சில நிமிடங்களுக்கு பிறகு, அங்கிருந்து கிளம்பிய விஜய் மக்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி தனது காருக்குள் ஏற சென்றபோது, திடீரென ஒரு மர்மநபர் வீசிய காலணி விஜய் மீது பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விஜய் இது குறித்து எவ்வித அதிர்ச்சியும் காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு கடந்த இரு தினங்களுக்கு முன்பு நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் விஜய்.
இதனிடையே விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பான நடவடிக்கை எடுக்க கோரி, தென்சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின் இது குறித்து புகார் அளித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“