பாக்கியலட்சுமி சீரியலை விட்டு, போங்கடா நீங்களும் உங்க சீரியலும் என கிளம்பிச் சென்றதாக கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. சாதாரண இல்லத்தரசி சந்திக்கும் சவால்களை அடிப்படையாக வைத்து வெளியான சீரியலுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர். டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்து வரும் இந்த சீரியலில் பாக்யாவாக சுசித்ரா, ராதிகாவாக ரேஷ்மா, கோபியாக சதீஷ் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் தனது மனைவிக்கு துரோகம் செய்யும் கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ளார். திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி பாக்கியாவுக்கு துரோகம் செய்துவிட்டு தோழி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார் கோபி. கோபியின் இந்த துரோகத்தை அவருடைய தாய், தந்தை, மகன்கள், மகள் என அனைவருமே கண்டிக்கிறார்கள்.
அதேநேரம், பாக்யா இந்த இன்னல்களால் துவண்டு விடாமல் தனது வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வருகிறார். தற்போது பாக்யா சமையல் பிசினஸில் வளர்ந்து வருகிறார். அதில் அவ்வப்போது சறுக்கல்களையும் சந்திக்கிறார். ஆனால், தன்னை மீறி பாக்யா பிஸினஸ் செய்வது என்பது கோபிக்கு உறுத்தலாகவே இருக்கிறது. அதேநேரம் கோபியின் மனைவி ராதிகாவும் பாக்யாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்குகிறார்.
இந்தநிலையில், கோபியாக நடிக்கும் சதீஷ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ”சிறு வயதிலேயே அம்மா, அப்பாவை இழந்துவிட்டேன். பாட்டி, அத்தை தான் என்னை வளர்த்தார்கள். இப்போது எனது மனைவியால் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நானும் உங்க மாதிரி மனுஷன்தான். எனக்குள்ளும் வருத்தம் வேதனைகள் இருக்கும்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக டைவர்ஸ் செய்த பாக்யாவை நான் எவ்வளவு டார்ச்சர் பண்றேன். மொள்ளமாரித்தனத்தை செய்கிறேன். இதையெல்லாம் புடிச்சிதான் செய்றேன்னு நீங்க நினைக்கிறீங்களா, நிச்சயமா இல்ல, இதெல்லாம் எவ்வளவு கசப்பான விஷயம் தெரியுமா. சண்டை நடக்கும், ரணகளமா இருக்கும். நிறைய முறை போங்கடா நீங்களும் உங்க சீரியலும் என கிளம்பி போயிடலாம்னு இருக்கும். கிளம்பி கூட போயிருக்கேன்,” இவ்வாறு சதீஷ் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“