விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அஷ்வின், பாடகி ஷிவாங்கியைப் பற்றி மிகவும் உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்ட போது, ஒரு சமையல் நகைச்சுவை நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வரவேற்பை பெறும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. குக் வித் கோமாளியில் பிரபலங்களாக பங்கேற்க அவர்களுக்கு கோமாளிகள் நகைச்சுவையுடன் உதவி செய்வார்கள். சமையல் கலைஞர் தாமு, வெங்கடேஷ் பாட் இருவரும் போட்டியாளர்களுக்கு டாஸ்க்குகளை அளிப்பார்கள். மொத்தத்தில் எளிமையாக சொல்வதென்றால் ஒரு சமையல் நிகழ்ச்சி. ஆனால், இதில் கோமாளிகளும் போட்டியாளர்களும் அடித்த லூட்டி நகைச்சுவையால் ஒரு வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக ரசிகர்களைக் கவர்ந்தது.
குக் வித் கோமாளி சீசன் 1ல் வனிதா டைட்டிலை வென்றார். முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பால், 2வது சீசன் தொடங்கப்பட்டது. குக் வித் கோமாளி 2வது சீசனில் அஷ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷகிலா, பவித்ரா லட்சுமி, தீபா, தர்ஷா, ரித்திகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதே போல, கோமாளிகளாக புகழ், பழைய ஜோஜ் தங்கதுரை, சக்தி, ஷிவாங்கி, பாலா, சரத், மணிமேகலை பங்கேற்று வருகின்றனர்.
குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளர்களுடன் கோமாளிகள் புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, தங்கதுரை, பாலா, சுனிதா சேர்ந்து அடிக்கும் நகைச்சுவை கவுண்டர் டயலாக்குகள், ரியாக்ஷன்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குக் வித் கோமாளி காட்சிகள் மீம்ஸ் கிரியேட்டர்களால் மீம்ஸ்களாகவும் பயன்படுத்தப்பட்டது. அதிலும், புகழ் அடிக்கும் கவுண்ட்டர்கள் ரியாக்ஷன்கள் எல்லாம் அவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. ஷிவாங்கியின் வெகுளித்தனமான பேச்சும், நகைச்சுவையும் பார்த்து அவரை எல்லோராலும் தங்கள் வீட்டு பிள்ளையாக கொண்டாடுகிறார்கள்.
இந்த நிலையில்தான், குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்சி நிறைவடைந்தது. இதில், அஷ்வின், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா லட்சுமி, ஷகிலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு சென்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி எபிசோடு இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து, போட்டியாளர்களில் ஒருவரான அஷ்வின், குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றியும் சக போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளாக பங்கேற்றவர்களைப் பற்றியும் தனது அனுபவங்களை மிகவும் உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக, “நீன் என்னை மிஸ் பண்ணுவியா?” என்று ஷிவாங்கி கேட்டதை குறிப்பிட்டு நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அஷ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: “இது குக் வித் கோமாளி அல்ல, இது எனக்கு குக் வித் ஃபேமிலி. என்ன ஒரு அனுபவம்! இந்த பயணம் எனக்கு மிகவும் சிறப்பானது. என் நினைவுகளில் பொதிந்திருக்கும்.
இந்த நிகழ்ச்சி என்னைப் போன்று கனவு காண்பவர்களுக்கான அங்கீகாரத்தை அளித்துள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டது என்கிற முடிவுக்கு நான் இன்னும் வரவில்லை. எந்த நாளிலும், எந்த நேரத்திலும் நான் மற்ற எல்லா பணிகளையும் விட்டுவிட்டு இந்த அணியுடன் ஒரு நிமிடமாவது செலவிட வருவேன். நான் இன்னும் என்ன கேட்க முடியும்! இணை போட்டியாளர்கள் & ஜோடிகள் அவுட் ஆஃப் தி வேர்ல்ட் மற்றும் டாப் நாட்ச். கேமரா மேன் முதல் எடிட்டர்கள் வரை ஜட்ஜஸ் முதல் இயக்குநர் மற்றும் சேனல் வரை இதுபோன்ற ஒரு சென்சேஷனலை ஏற்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இறுதியாக, பார்வையாளர்களான நீங்கள் மிகவும் அற்புதம், உங்கள் அளவில்லா அன்பு, ஆதரவு மற்றும் மிக முக்கியமாக நீங்கள் எங்களுக்காக செலவழித்த நேரம், அவற்றை வெறுமனே வார்த்தைகளால் சொல்வதற்கில்லை. சல்யூட்! இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஜோடிகளுக்கும் உங்களது அன்பும் ஆதரவும் என்றென்றும் தொடரும் என்று நம்புகிறேன்.
அதிலும் எங்கள் சிவாங்கிக்கு ஒரு சிறப்பு குறிப்பு உள்ளது. நீ தான் முதலில் என்னை கம்ஃபோர்ட்டாக இயங்க வைத்தாய். எனது இன்னொரு வேடிக்கையான பக்கத்தை வெளியே கொண்டு வந்து நிஜமான என்னை வெளியில் காட்டியது நீயே தான். நீ தொடர்ந்து என்னிடம் கேட்கும் அந்த ஒரு கேள்வி.. ‘நீ என்னை மிஸ் பண்ணுவியா?’ - ஆம் !! மிகவும் மிஸ் பண்ணப்படுவாய் நீ! இவ்வாறு அஷ்வின் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.