விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ‘தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர்’ தொடரில் நடிக்கும் துணை நடிகர் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர்’ சீரியல் பார்வையாளர்களிடையே பிரபலமான ஒன்று. இந்த தொடரில் கதாநாயகியாக ஜாக்குலின் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சித்தார்த் நடித்து வருகிறார். இவர்களுடன் உஷா எலிசபேத், பி.ஆர்.வரலட்சுமி, அஞ்சலி பிரபாகரன், அஷ்ரிதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
‘தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர்’ தொடரில் துணை நடிகராக செல்வரத்தினம் (45) என்பவர் நடித்து வருகிறார். இவர் சென்னை எம்.ஜி.ஆர் நகர் வள்ளல்பாரி தெருவில் வசித்து வந்தார். இலங்கைத் தமிழரான இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது. செல்வரத்தினம் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வீடு உள் கட்டமைப்பு ஒப்பந்த வேலைகள் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோடு பகுதிக்கு ஆட்டோவில் வந்த 4 பேர் வள்ளல் பாரி தெருவில் உள்ள செல்வரத்தினம் வீட்டிற்கு வந்து, அவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியதில் செல்வரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செல்வரத்தினரத்தை கொலை வெறியுடன் வெட்டிய அந்த 4 பேரும் அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த பயங்கர கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிவி சீரியல் நடிகரான செல்வரத்தினம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக இந்தக் கொலை நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் வீடுகள் நிறைந்த பகுதியில் காலையில், மர்ம நபர்களால் டீவி சீரியல் நடிகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"