/indian-express-tamil/media/media_files/aAehk1YfXMiHgCy1eDNi.jpg)
கேப்டன் விஜயகாந்த், தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நட்சத்திரமாக திகழ்ந்து, பின்னர் அரசியலில் தனி முத்திரை பதித்தவர். தனது அதிரடி நடிப்பு, துணிச்சலான பேச்சு மற்றும் எளிய மக்களுடன் பழகும் இயல்பு காரணமாக, திரையிலும் நிஜ வாழ்விலும் கேப்டன் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். மக்கள் நலனுக்காகவே தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர், 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) என்ற கட்சியைத் தொடங்கினார்.
கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் 2006 சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார். இதில் அனைத்து 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க தனித்துப் போட்டியிட்டது. விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். இருப்பினும், அவரது கட்சி ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற போதிலும், 8.4% வாக்குகளைப் பெற்றது.
இந்நிலையில் அவரது கட்சியில் சேர மதுரையில் இருந்து மாணவர்கள் வந்ததும் அதை விஜயகாந்து கண்டித்த சம்பவம் குறித்தும் பாடலாசிரியர் சினேகன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தீக்ஷா யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் கட்சி தொடங்கப்போவதாகக் கேள்விப்பட்ட மாணவர்கள் சிலர், அதில் சேர வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவரைப் பார்க்க மதுரையில் இருந்து பஸ் நிறைய கிளம்பி வந்தனர். குறிப்பாக அனைவரும் கல்லூரி மாணவர்கள். வந்தவர்களைச் சுற்றுலாப் பயணிகள் என்று முதலில் நினைத்த விஜயகாந்த், அவர்களுக்கு உணவு வாங்கித் தந்து, "எல்லாம் சுத்தி பார்த்தீங்களா? பத்திரமா வீட்டுக்கு போங்க" என்று அன்புடன் கூறியுள்ளார்.
ஆனால், அவரைப் பார்க்கவே வந்ததாக மாணவர்கள் அனைவரும் தெரிவித்தனர். மேலும், அவரது கட்சியில் இணைய விரும்புவதாகவும் அவர்கள் கூறியதால் விஜயகாந்த் கோபமடைந்து அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளார். அந்த மாணவர்களைப் பார்த்து, "முதலில் படிப்பை முடிங்க, அப்புறம் அரசியலில் ஈடுபடுங்க. இதெல்லாம் செய்யக்கூடாது" என்று கண்டிப்புடன் கூறினார். மேலும், "வீட்டிற்குத் தெரியுமா என்று சொல்லிவிட்டு வந்தீர்களா? படிப்பு முடிந்ததும் வாருங்கள்" என்று கூறி, அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.