நடிகர் மற்றும் இயக்குநரான சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன் நிறுவனத்தைப் கவனித்து வந்த அவரது அத்தை மகன் அசோக் குமார், நேற்று முன்தினம் தற்கொலைசெய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னால், அவர் எழுதிவைத்த கடிதத்தில், சினிமா ஃபைனான்ஸியர் அன்புச் செழியன் கொடுத்த நெருக்கடியினால்தான் தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் பலரும் அன்புச் செழியன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். சசிகுமார் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறை அன்புச் செழியன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகிறது.
இந்த நிலையில், நேற்று இயக்குநர் சீனு ராமசாமி, அன்புச் செழியனை 'உத்தமன்' என்று குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். தற்போது, இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் அன்புச் செழியனிடம் பணம் வாங்கித்தான் படம் எடுத்துவருகிறேன். அதை, முறையாகத் திரும்ப செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரை அன்புச் செழியன் என்னிடம் சரியான முறையில்தான் நடந்துவருகிறார். அனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்திரிப்பதாகத் தோன்றுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சினிமாத் துறையில் ஒருபக்கம் அன்புச் செழியனுக்கு எதிர்ப்பும், மறுபக்கம் ஆதரவும் வலுத்து வருகிறது.