/indian-express-tamil/media/media_files/2025/09/12/download-8-2025-09-12-15-43-12.jpg)
கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமா மட்டும் இல்லை தமிழ்நாடு அரசியல் தளத்திலும், அரசியலுக்கு அப்பார்ப்பட்ட பொதுத் தளத்திலும் தான் வாழ்ந்தவரை தாக்கத்தை ஏற்படுத்தியவர். விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை மண்ணின் மைந்தனான இவர் கடந்த 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தார். இவரது குடும்பம் ரைஸ் மில் நடத்தி வந்ததால் சிறுவயதில் நல்ல வசதியாகவே வளர்ந்தார். 10ஆம் வகுப்பு வரை படித்த இவர்.
அதற்குமேல் படிக்க ஆர்வமில்லாமல் இருந்தார். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சினிமா பார்த்து வந்த விஜயகாந்த் அதன் பின்னர் சினிமாவில் நடிக்க முடிவு செய்து சென்னைக்கு வந்தார். எம்.ஜி.ஆர் நடித்த எங்கள் வீட்டுப் பிள்ளை படத்தினை சுமார் 70 முறை பார்த்ததாக அவரே ஒரு சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்தபோது, இவருக்கு வாய்ய்பு அளிப்பதாக நம்பிக்கை கொடுத்தவர்களும் இறுதி நேரத்தில் 'சரியா வசனம் பேசத் தெரியவில்லை, கருப்பாவேற இருக்க’ போன்ற காரணங்களைக் கூறி நிராகரித்தனர். கதாநாயகனாக வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த இவருக்கு முதலில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இனிக்கும் இளமை படத்தில் இருந்து தனது சினிமா வாழ்க்கையை வில்லனாக தொடங்கியவர், அதன் பின்னர் பல வெள்ளி விழா படங்களுக்கு கதாநாயகனாக மாறினார். இனிக்கும் இளமை படத்தில்தான் இவரது பெயர் விஜயகாந்த் என மாற்றப்பட்டது.
தூரத்து இடி முழக்கம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த விஜயகாந்த். அதன் பின்னர் பலராலும் அறியப்பட்டார். தான் வாய்ப்பு தேடிச் சென்றபோது யாரெல்லாம் இவரை பல காரணங்களைக் கூறி நிராகரித்தார்களோ, அவர்கள் அனைவரும் விஜயகாந்த் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கும் தேடித் தேடிவந்து தங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுங்கள் என வரிசையில் நின்றனர். யாரையும் நிராகரிக்காமல், அனைவருக்கும் படங்கள் நடித்துக் கொடுத்தார் கேப்டன்.
ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் வணிகத்தை அன்றைய காலகட்டத்தில் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கொண்டு சென்றார். கேரவனே இல்லாத காலகட்டம் அது, தனக்கான படப்பிடிப்பு முடிந்ததும், ஒருபோதும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியேறாமல் அங்கேயே இருந்து படப்பிடிப்பு பிரச்னை இல்லாமல் நடக்கின்றதா என்பதை கண்காணிப்பார்.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே, யாருமே செய்யாததை, செய்ய நினைக்காததைச் செய்தார் விஜயகாந்த். அதாவது சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது விஜயகாந்த் படத்தில்தான். அதன் பின்னர்தான் மற்றவர்கள் இதனை பின்பற்றத்தொடங்கினர். இதற்கான தனது சம்பளத்தில் இருந்து கணிசமான தொகையை தயாரிப்பாளருக்கு விட்டுக்கொடுத்தவர்.இப்படிப்பட்ட இவருக்கு நடிகர் கமல்ஹாசனை விட அதிகமாக பெண் ரசிங்கர்கள் இருந்தார்கள் என்று தெரியுமா?
அதை பற்றி கருபழனியப்பன் ஒரு நேர்காணலில் பேசுகையில், "கமலை விட விஜயகாந்த சாருக்கு 90 களில் அதிகம் பெண் ரசிகர்கள் இருந்தார்கள். அனால் அது ஏனோ வெளியே தெரியவில்லை. இப்போது கூட பழைய தியேட்டர் நடத்தியவர்களிடம் போய் கேட்டால் தெரியும், கமலை விட விஜயகாந்த் அவர்களுக்கு பெண்கள் கூட்டம் எவ்வளவு வந்தனர் என்று." என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.