வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்)’’ படத்தின் வெளியீட்டு தேதியுடன் வெளியாகியுள்ள புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
லியோ படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். பிரபல நடிகர் மைக் மோகன் வில்லனாக நடித்து வரும் இந்த படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஏற்கனவே கோட் படத்தில் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. பொதுவாக படத்தின் படப்பிடிப்புக்கு முன்பே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பது சரியாக இருக்காது என்பதற்கு, விஜயின் முந்தைய படமாக லியோ ஒரு உதாரணமாக அமைந்துவிட்டது. லியோ படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும் முன்னரே படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்ததால், திரைக்கதை அமைப்பதில் தனக்கு கடும் சிரமம் ஏற்பட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
இதனை கருத்தில் கொண்டு விஜய் தற்போது நடித்து வரும் ‘’ தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’’ படத்தின் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படமாமல் இருந்தது. இது குறித்து அறிவிப்பு எப்போது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது தயாரிப்பு நிறுவனம் படத்தின் வெளியீட்டு தேதியுடன், அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த புதிய போஸ்டரில் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மாஸ் ஹீரோவுக்கு தோற்றத்தில் இருக்கிறார்.
ஐரோப்பிய அமைப்பில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சியும் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள நிலையில், பாஸ்போர்ட்டில் பல விசா முத்திரைகள் உள்ளன.இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் 1970-களில் விமானத்தை ஹைஜாக் செய்து பணத்தை திருடிவிட்டு, மாயமான டி.பி.கூப்பரின் கதையை தழுவிதான் கோட் படம் எடுக்கபட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், அதனை நிரூபிக்கும் விதமாக இந்த போஸ்டரில் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
படம் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போஸ்டரில் மலோசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வது போன்றும், அதில் பிப்ரவரி 16,2003 தேதி இடம்பெற்றுள்ளதையும் பார்க்கும்போது இது டி.பி.கூப்பரின் கதையாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil