விஜய் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பெங்காலியில் வெளியான ஸ்ரீமோயி சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும்.
பாக்யலட்சுமி 2 மகன்கள் 1 மகள் என வளர்ந்த பிள்ளைகளின் அம்மா. தன்னுடைய குடும்பம்தான் தனது உலகம் என்று வாழும் பாக்யலட்சுமியின் மூத்த மகனுக்கு திருமணமாகி ஒரு மருமகளும் இருக்கிறாள். பாக்யலட்சுமி குடும்ப கடமைகளைத் தாண்டி சாதிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார். ஆனால், இந்த வயதிலும் பாக்யலட்சுமியின் கணவர் கோபி தனது மனைவியை விடுத்து தனது முன்னாள் காதலி ராதிகாவை தேடிச் செல்கிறார்.
இந்த பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில், கோபி ராதிகா வீட்டுக்கு மீண்டும் போகிறார். அங்கே வரும் ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ் உடன் கோபி சண்டை போடுகிறார். பின்னர் ராஜேஷை அவரை வெளியில் துரத்திவிட்டு கோபி ராதிகாவுடன் பேசுகிறார்.
“இனி உன்னை விட்டுவிட்டுப் போகமாட்டேன். எனக்கு பேமிலி இருக்கு… ஆனாலும், உன்னை என்னால் விட முடியாது. இந்த உறவுக்கு என்ன பெயர் என்று கேட்டால் என்னால் சொல்ல முடியாது. உன்னுடனும், உன் மகளுடனும் எப்போதும் இருப்பேன். நீங்கள் கஷ்டப்படும்போது என்னால் விட்டுவிட்டு போக முடியாது” என்று உணர்ச்சிப் பூர்வமாக பேசுகிறார்.
ராதிகாவிடம் தொடர்ந்து பேசும் கோபி, “என் குடும்பமே என்னை விட்டு போனாலும் பரவாயில்லை. ஆனால், நான் உன்னை விட்டு போகமாட்டேன். இனி எவன் வாரான்னு நான் பார்க்கிறேன். எந்த பிரச்சனை வந்தாலும் அதை நான் பார்த்துக்கிறேன்.” என்று கூறி கோபி ராதிகாவிடம் சத்தியம் செய்கிறார்.
இதனிடையே, எழில் அமிர்தாவுக்கு போன் செய்து பேசுகிறார். படத்தின் கதை என்ன என அமிர்தா மீண்டும் மீண்டும் கேட்கிறார். எழிலும் கதையை சொல்லத் தொடங்குகிறார்.
போனில் அமிர்தாவுடன் சிரித்து சிரித்து பேசும்போது அம்மா பார்த்துவிடுகிறார். ஆனாலும், எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்துவிடுகிறார். அதோடு, எழிலின் தங்கை இனியாவும் கிண்டல் செய்கிறாள்.
பாக்யலட்சுமியின் கணவர் கோபி ராதிகா வீட்டுக்கு சென்றுவிட்டு இங்கு வருகிறார். அப்போது, கோபி ஒரு மாதிரியாக இருப்பதாக மற்றவர்கள் சந்தேகம் கொள்கிறார்கள். ஆனால், கோபி அப்படி எதுவும் இல்லை என்று பேசி சமாளிக்கிறார். அதே நேரத்தில், தான் ராதிகாவுக்கு செய்து கொடுத்த சத்தியம் குடும்பத்தினருக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று கோபி வருத்தப்படுகிறார். அடுத்து, கோபி தனக்கு தலை வலிப்பதாக கூறிவிட்டு உள்ளே செல்கிறார்.
அடுத்த காட்சியில், பாக்யலட்சுமியின் மகள் இனியா, தனது பள்ளியில் charity டே நடைபெறப்போகிறது. அதற்காக எதாவது ஸ்பெஷல் உணவு செய்து கொடு என்று கேட்கிறாள். பாக்யா அதற்காக இனியாவுக்கு குலாப் ஜாமுன் செய்து கொடுக்கிறார்.
இதையடுத்து, பாக்யலட்சுமி ராதிகாவிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்காக அவரது வீட்டுக்கு செல்லப்போவதாக கூறுகிறார். அதனால், கோபி அலுவலகம் கிளம்பும் போது தன்னை ராதிகா வீட்டில் விட்டுவிடும்படி கேட்கிறார்.
பாக்யலட்சுமி தன்னை ராதிகா வீட்டில் விட்டுவிட சொன்னதைக் கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். கோபி முகம் அதிர்ச்சியில் வெளிறிப்போக இன்றைய எபிசோடு நிறைவடைந்தது.
கோபி தனது மனைவி பாக்யலட்சுமியை ராதிகா வீட்டில் விட்டுவிட சம்மதிப்பாரா? பாக்யலட்சுமியை அழைத்துச் செல்வாரா? என்று வருகிற நாளைய எபிசோடு பார்வையாளர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.