VJ Chithra Suicide: சின்னத்திரை நடிகை சித்ரா படபிடிப்பை முடித்து விட்டு, நேற்று அதிகாலையில் தற்கொலை செய்துக் கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வி.ஜே.சித்ரா
நசரத்பேட்டையிலுள்ள ஓட்டலில் தனது வருங்கால கணவர் ஹேம்நாத் ரவியுடன் தங்கியிருந்த அவர், பட்டுச்சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் கடந்த அக்டோபரில் பதிவு திருமணம் செய்துக் கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இதனால் சித்ராவின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்தோ வெஸ்டர்ன் லுக்...
ஈ.வி.பி கார்டனில் விஜய் டிவியின் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்த சித்ரா இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மிகுந்த உற்சாகத்தில் காணப்பட்டதால், அவர் மன அழுத்தத்தில் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை என அவரது சக நடிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் சித்ராவின் கன்னத்தில் காயங்கள் இருந்தது, சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இதற்கிடையே சித்ராவின் கணவருக்கும் அவரது அம்மாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால், திருவான்மியூரில் தனது அம்மா வீட்டிலிருந்து, டிசம்பர் 4-ம் தேதி முதல் ஓட்டலில் தங்கியதாக தெரிகிறது. இதற்கிடையே நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள பதிவில், ”உன்னை இந்த வகையில் இழப்பேன் என்று நான் எப்போதும் நினைத்தது இல்லை. கடைசியாக நான் உன்னுடன் பேசும்போது, அந்தத் தொலைப்பேசி அழைப்பின் ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கைத்துணை தொடர்பான விவகாரத்தில், உன் மனதை மாற்ற முயற்சி செய்தேன். நீ அதை ஏற்கத் தயாராக இல்லை. இதுதான் நடக்கும் என எனக்குத் தெரிந்திருந்தால், நான் முயற்சி செய்வதை நிறுத்தியிருக்கமாட்டேன். உன்னை இழந்த நேரத்தில் எங்கள் இதயம் நொறுங்கிவிட்டது சித்து" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வருங்கால கணவருடன் விஜய் டிவி நிகழ்ச்சியில்...
”இதயம் நொறுங்கி விட்டது. இது நீ இல்லை சித்ரா” என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் குறிப்பிட்டிருக்கிறார். ”இதை உன்னிடமிருந்து எதிர் பார்க்கவில்லை” என வெங்கட் ரங்கநாதன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். ”உன் தைரியத்திற்காக நீ அறியப்பட்டாய். பல பெண்களுக்கு, நீ ஒரு உத்வேகம்... நீ மீண்டும் போராடியிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்... இது பதில் அல்ல... ஒரு போதும் பதிலாக இருக்காது” என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு ஜோடியாக நடித்து வந்த குமரன் தெரிவித்திருக்கிறார்.
அந்த சீரியலில் மூர்த்தியாக நடித்து வரும் ஸ்டாலின் நேற்று சித்ராவின் உடல் வைக்கப்பட்டிருந்த மார்ச்சுவரிக்கு வெளியில் நின்று அழுத வீடியோ பார்வையாளர்களை கலங்க செய்தது. இந்நிலையில் இன்று சித்ராவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படுகிறது. அவரது மரணம் குறித்து, சக நடிகர்கள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”