விஜய் டிவி பிரபலங்களான மாகாபா ஆனந்த், டி.ஜே.பிளாக் ஆகிய இருவரும் அமெரிக்காவில் உள்ள நடிகர் நெப்போலியனை சந்திக்க சென்றுள்ள நிலையில், அவரது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், படங்களில் பாடகராகவும் தன்னை நிரூபித்துள்ளார். எட்டுப்பட்டி ராசா படத்தின் மூலம் கிராமத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நெப்போலியன்
திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட எம்.பி.யாக இருந்த நெப்போலியன், மத்திய அமைச்சராகவும் பதவியில் இருந்துள்ளார். ஆனால் தனது மகனுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். மேலும் சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வரும் நெப்போலியன், அவ்வப்போது இந்தியா வந்து செல்கிறார்.
அதேபோல் அமெரிக்காவில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வரும் நெப்போலியன் அவ்வப்போது தனது தோட்டத்தில் இருந்து விவசாயம் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தனது மனைவி ஜெயசுதா, மகன்கள் தனுஷ் மற்றும் குணால் ஆகியோருடன் கலிபோர்னியாவில் குடியேறியுள்ள நெப்போலியன், அமெரிக்காவில் தொழிலதிபராக வலம் வருகிறார். அவரது மகன் குணால் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று செட்டில் ஆகியுள்ள நெப்போலியன், தமிழகத்தில் திருநெல்வேலி பகுதியில், பாரம்பரிய வைத்தியத்தால் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்பதை தெரிந்துகொண்டு, சொந்தமாக அங்கு மருத்துவமனை ஒன்றை கட்டி வைத்துள்ளார். தற்போது இந்த மருத்துவமனையில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலரும் சிகிச்சை பெற்று வருகிறனர்.
இதனிடையே அமெரிக்காவில் உள்ள நெப்போலியன் அவ்வப்போது இந்தியா வந்தாலும், அவரை சந்திக்க இங்கிருந்து பலரும் அமெரிக்கா சென்று வருகின்றனர். அந்த வகையில், தற்போது விஜய் டிவி புகழ், மாகாபா ஆனந்த் மற்றும் டி.ஜே.பிளாக் ஆகியோர் நெப்போலியனின் அமெரிக்க வீட்டுக்கு சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதில், முதல்முறையாக மாகாபா ஆனந்த் மற்றும் டி.ஜே.பிளாக் ஆகியோரை சந்தித்துள்ளேன். இந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“