வலது கையில் காயமடைந்த கமல்ஹாசன் ஒரு முழுநீள ஆக்ஷன் சண்டை காட்சியை தனது இடதுகையை மட்டும் பயன்படுத்தி நடித்தது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்ட கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர். சாதாரனமாக ஒரு படம் நடித்தாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பை வழங்குவதில் கமல்க்கு நிகர் அவர்தான் என்று பலரும் கூறுவது உண்டு.
அந்த வகையில் உயர்ந்த உள்ளம் படத்தின் படப்பிடிப்பின்போது வலது கையில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டதால் ஒரு சண்டை காட்சி முழுவதும் இடது கையை மட்டுமே பயன்படுத்தி கமல்ஹாசன் சண்டையிட்டதாக ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனர் ஏ.வி மெய்யப்பனின் பேத்தியும், ஸ்டுடியோவின் தயாரிப்பாளருமான அருணா குஹன் ஏவிஎம் ஸ்டுடியாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளர்ர்.
இது குறித்து அருணா குஹன் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில், 1985-ல் வெளியாக உயர்ந்த உள்ளம் படத்தின் படப்பிடிப்பின்போது கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து இது கமல்ஹாசன் நடிப்பின் அர்ப்பணிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி கமல் நடிப்பில் பல படங்களை இயக்கியுள்ள இவர், இயக்கத்தில் கடந்த 1985-ம் ஆண்டு வெளியான படம் உயர்ந்த உள்ளம்.
அம்பிகா, ராதாரவி, வி.கே.ராமசாமி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பல நடித்திருந்த இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, கமல்ஹாசனுக்கு விபத்து ஏற்பட்டு வலது கையில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்த விரும்பாத கமல்ஹாசன அதிரடி ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்னத்திடம் இந்த காட்சியின் ஒரு மாற்றத்துடன் படப்பிடிப்பை நடத்துமாறு கேட்டுக் கொண்டார்: அதன்படி கமல் அந்த சண்டை காட்சி முழுவதும் தனது வலது கைக்கு பதிலாக, தனது இடது கையைப் பயன்படுத்தி சண்டையிட்டுள்ளார்.
இது குறித்து அருணா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கமல்ஹாசனின் அசாதாரண அர்ப்பணிப்பு மற்றும் திறமையை இது காட்டுகிறது. உயர்ந்த உள்ளம் படப்பிடிப்பிற்கு முன்பு கமல் சார் வலது கையில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் அவர் படப்பிடிப்புக்காக வந்திருந்தார். சண்டைக் காட்சிக்காக அவர் வந்தபோது, ஜூடோ ரத்தினம் சார் மற்றும் எஸ்.பி. முத்துராமன் சாரிடம் காயம் ஏற்பட்டாலும், திட்டமிட்டபடி காட்சியில் ஒரு ஷாட்டைக் கூட மாற்ற வேண்டாம், திட்டமிட்டபடி முழு காட்சியையும் எடுத்துவிட வேண்டும் என்று கூறினார்.
ஆனால் ஒரு மாற்றமாக வலது கையில் அடிப்பட்டுள்ளதால் சண்டை காட்சி முழுவதும் இடது கையை பயன்படுத்தி சண்டையிடுவதாக கூறினார். நீங்கள் கூர்ந்து கவனித்தால், அந்த காட்சியில் அவர் தனது வலது கை பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியும். சொன்னபடியே அந்த காட்சி முழுவதும் ஒரே கையால் சண்டையிட்டு தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தியிருப்பார் கமல் சார் என்று கூறி அந்த சண்டைக்காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
களத்தூர் கண்ணமா (1960) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஏவிஎம் ஸ்டுடியோவில் தனது பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், ஏவிஎம் ஸ்டுடியோவையும் அதன் நிறுவனர் ஏவி மெய்யப்பனையும் எப்போதும் பாராட்டி வருகிறார். சமீபத்திய நேர்காணலில் கூட, கமல்ஹாசன் தனது படங்களின் அனைத்து உடைகள் மற்றும் செட்களைப் பாதுகாப்பதில் ஏ.வி.எம் ஸ்டுடியோவின் முயற்சிகளைப் பாராட்டினார். இதில் களத்தூர் கண்ணம்மாவில் கமல்ஹாசன் பயன்படுத்திய ஆடை இப்போது கூட ஏவிஎம் ஸ்டுடியோவில் பாதுகாக்கப்படுகிறது.
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார். அடுத்ததாக எச்.வினோத்துடன் விவசாயம் சார்ந்த ஒரு திரைப்படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். இதில் மணிரத்னம் இயக்கும் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“