/indian-express-tamil/media/media_files/2025/07/24/aayiraththil-oruvan-2025-07-24-16-32-56.jpg)
எம்.ஜி.ஆர் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் வசனங்கள் உருவான விதம் குறித்து அப்படத்திற்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய ஆர்.கே. சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநரான பி.ஆர். பந்துலுவிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆர்.கே. சண்முகம். இவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் எம்.ஜி.ஆர் பேசிய வசனங்கள் அனைத்தும் இன்றளவும் கூட ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் வகையில் அமைந்திருக்கும்.
இதைத் தொடர்ந்து, 'முகராசி', 'தனிப்பிறவி', 'ரகசிய போலீஸ் 115', 'ரிக்ஷாக்காரன்', 'சிரித்து வாழ வேண்டும்', 'ஊருக்கு உழைப்பவன்' என பல்வேறு எம்.ஜி.ஆர் படங்களில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பை ஆர்.கே. சண்முகம் பெற்றார். அந்த அளவிற்கு இவரது வசனங்கள் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தன. இந்நிலையில், இவை அனைத்திற்கு தொடக்கமாக அமைந்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் வசனங்கள் உருவான விதம் குறித்து பழைய நேர்காணல் ஒன்றில் ஆர்.கே. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, "எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியார் ஆகியோர் பேசும் வகையில் 7 சீன்களை முதலில் எழுதிக் கொடுக்கிறேன். அதனை எம்.ஜி.ஆரிடம் காண்பியுங்கள். அந்த சீன்கள் அனைத்தும் எம்.ஜி.ஆருக்கு பிடித்திருந்தால், தொடர்ந்து நானே இப்படத்திற்கு வசனம் எழுதுகிறேன். இல்லையென்றால், வேறு ஒரு பெரிய எழுத்தாளரைக் கொண்டு வசனம் எழுதுங்கள் என்று கூறி விட்டேன்.
நான் எழுதிய வசனங்கள் அனைத்தும் எம்.ஜி.ஆருக்கு பிடித்து விட்டது. இதனால், எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்த போது, தனது பாராட்டுகளை அவர் தெரிவித்தார். குறிப்பாக, வாழ்க, வளர்க என்று என்னை வாழ்த்தினார்" என்று ஆர்.கே. சண்முகம் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.