ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடந்த 30 ஆண்டுகளில் 71,038 தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 41,866 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், 1990 ஆண்டு முதல் தற்போது வரையிலான கடந்த 30 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள தீவிரவாத தாக்குதல்கள், பலியானவர்கள் உள்ளிட்டவைகளின் விபரங்களை அளித்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த 30 ஆண்டுகளில் 71,038 தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 41,866 பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 14,038 பேர் அப்பாவி பொதுமக்கள், 5,292 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதல்களில் 22,536 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
1990களில், ஆண்டுதோறும் 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் தீவிரவாத தாக்குதல்கள், காஷ்மீரில் நடைபெற்று வந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இந்த தாக்குதல்களின் அளவு 500க்கும் கீழ் சென்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டது, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்று இரண்டு மாநிலங்களாக பிரித்தது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளால், அங்கு சற்றும் பதட்டம் தணிந்துள்ளது. அங்கு அமைதி திரும்பியுள்ள நிலையில், செப்ட தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடையுத்தரவு, பல்வேறு பகுதிகளில் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மொபைல் போன் சேவை வழங்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டன.
ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அங்கு லேண்ட்லைன் தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டன. லடாக் பகுதியில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ள நிலையில், முடக்கப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. முடக்கப்பட்டிருந்த 93,247 லேண்ட்லைன் தொலைபேசி சேவைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. செயல்பட துவங்கியுள்ள 59,76,359 மொபைல் போன் சேவைகளில், 20,05,293 போஸ்ட்பெய்ட் மொபைல்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள மக்களுக்கு இணையதள சேவைகளை வழங்க 280 இ-டெர்மினல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு மற்றும் கல்லெறி தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லெறி சம்பவங்களை ஒப்பிடுகையில், 2018ம்ஙஆண்டில் 802 நிகழ்வுகள் நடைபெற்றிருந்த நிலையில், 2019ம் ஆண்டில் இதன் அளவு 544 ஆக சரிவடைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள 20,411 பள்ளிகளும் திறக்கப்பட்டு அங்கு வழக்கமான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 50,537 10ம் வகுப்பு மாணவர்களில் 50,272 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றுள்ளனர். இது சதவீதத்தின் அடிப்படையில், 99.48 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகரில் இயங்கி வரும் மருத்துவமனைகளில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 7,67,475 வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். அக்டோபர் மாதத்தில் 7,91,470 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த காலகட்டத்தில்,
43,998 கிலோலிட்டர் பெட்ரோல்
37,129 கிலோலிட்டர் டீசல்
4,921 கிலோலிட்டர் கெரசின்
15,74,873 சமையல் காஸ் சிலிண்டர்கள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் இருந்து 11.59 லட்சம் டன் ஆப்பிள்கள் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளால் விற்கமுடியாத 8960 டன் ஆப்பிள்களை, நாபெட் நிறுவனம், ரூ.38 கோடி மதிப்பிற்கு கொள்முதல் செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.