எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது அலிக்கு 2019 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது, "அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கான அவரது முயற்சிகளுக்காகவும், குறிப்பாக அண்டை நாடான எரித்திரியாவுடனான எல்லை மோதலைத் தீர்ப்பதற்கான அவரது தீர்க்கமான முயற்சிகளுக்காகவும் இது வழங்கப்பட்டுள்ளது".
எரித்திரியாவுடன் எத்தியோப்பியாவின் மோதல் என்ன, பிரதமர் அபி அகமது என்ன செய்தார்?
ஜூலை 2018 இல், மக்கள்தொகை அடிப்படையில் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நாடான எத்தியோப்பியாவின் பிரதமரான அபி அகமது, மூன்று மாதங்களுக்கு முன்பு, எல்லையைத் தாண்டி அண்டை நாடான எரித்திரியாவுக்குள் சென்றார்.
எரித்திரிய தலைநகர் அஸ்மாராவில், ஜனாதிபதி இசயாஸ் அஃப்வெர்கியை அவர் அன்புடனும், இறுக்கமாகவும் கட்டித் தழுவி, ஆப்பிரிக்காவின் இரண்டு ஏழ்மையான நாடுகளின் குறைந்தது 80,000 மக்களைக் கொன்ற 20 ஆண்டுகால யுத்தம் இறுதியாக முடிவுக்கு வந்துவிட்டது என்று உலகிற்குக் காட்டினார்.
பிரதமர் அபி அகமது மற்றும் ஜனாதிபதி அஃப்வெர்கி ஆகியோர் தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், இராஜதந்திர மற்றும் பயண உறவுகளை மீண்டும் தொடங்குவதாக கூறி "அமைதி மற்றும் நட்பின் புதிய சகாப்தம்” என்று அறிவித்தனர். சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் 2018 செப்டம்பரில் இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரதமர் அபி அகமதுவின் இரு நாடுகளுக்கு இடையிலான முட்டுக்கட்டைகளை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில், ஜனாதிபதி அஃப்வெர்கி ஆற்றிய முக்கிய பங்கை, வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட நோபல் மேற்கோள் காட்டி ஒப்புக் கொண்டது. நோபல் குழு கூறுகையில், "இந்த நோபல் விருது எத்தியோப்பியாவிலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்க பிராந்தியங்களிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக உழைக்கும் அனைத்து பங்குதாரர்களையும் அங்கீகரிப்பதாகும்" என்றது.
எத்தியோப்பியா-எரித்திரியா மோதலின் வரலாறு
ஏப்ரல் 1993 இல், எரித்திரியா எத்தியோப்பியாவுடனான அதன் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து, ஒரு சுதந்திர நாடாக மாறியது, இது உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்றிற்கு அருகிலேயே இருந்தது. இந்த சுதந்திரம் என்பது எத்தியோப்பியாவிற்கு எதிராக எரித்திரிய விடுதலைப் போராளிகள் நடத்திய 30 ஆண்டுகால யுத்தத்தினால் கிடைத்த விளைவாகும்.
எவ்வாறாயினும், சுதந்திரம் அடைந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையில் 'பேட்மே' (Badme) பகுதிக்காக போர் வெடித்தது - வெளிப்படையான முக்கியத்துவம் இல்லாத ஒரு எல்லை நகரம் அது.
கடுமையான போரினால், குடும்பங்கள் சிதைந்தன. உள்ளூர் வர்த்தக பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்த மோதலால், ஆயிரக்கணக்கான எரித்திரியர்கள் ஐரோப்பாவிற்கு தப்பி ஓடினர்.
ஜூன் 2000 இல், இரு நாடுகளும் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதைத் தொடர்ந்து, அதே ஆண்டு டிசம்பரில், அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸில் அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் முறையாக போரை முடிவுக்குக் கொண்டு வந்து சர்ச்சைக்கு தீர்வு காண ஒரு எல்லைக் கமிஷனை அமைத்தது.
ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை ஏப்ரல் 2002 இல் வழங்கியது. எரித்திரியாவுக்கு பேட்மே பகுதி வழங்கப்பட்டது.
இருப்பினும், எத்தியோப்பியா கூடுதல் நிபந்தனைகள் இல்லாமல் முடிவை ஏற்க மறுத்துவிட்டது. பேட்மே மீதான கட்டுப்பாட்டைக் கொடுக்க மறுத்துவிட்டது. இதனால், எல்லைகளில் மோதல்கள் வெடித்தன.
அமைதிக்கான பாதையில், அபி அகமது
2017 ஆம் ஆண்டில், எத்தியோப்பியாவின் ஆளும் எத்தியோப்பியன் மக்களின் புரட்சிகர ஜனநாயக முன்னணி (ஈபிஆர்டிஎஃப்) எரித்திரியாவுடனான தனது உறவை மாற்ற விரும்புவதாக சுட்டிக்காட்டியது.
ஏப்ரல் 2018 இல், அப்போது போரில் பங்கேற்ற 41 வயதான முன்னாள் ராணுவ அதிகாரியான அபி அகமது பிரதமரானார். அடுத்தடுத்த விஷயங்கள் உடனடியாக வேகமெடுத்தன.
ஜூன் மாதத்தில், பிரதமர் அபி அகமது கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால முட்டுக்கட்டைகளை உடைத்தார். ஜூலை 8, 2018 அன்று, அஸ்மாராவில் ஜனாதிபதி அஃப்வெர்கியைச் சந்திப்பதற்கு ஒரு நாள் முன்பு, பிரதமர் அகமது ஒரு உற்சாகமான அறிவிப்பை வெளியிட்டார்: "எரித்திரியாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையில் இனி எல்லை இல்லை, ஏனெனில் அன்பின் பாலம் அதை அழித்துவிட்டது" என்றார்.
1993 ல் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஜனாதிபதி அஃப்வெர்கி, தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எத்தியோப்பியாவுடனான போரைப் பயன்படுத்திக் கொண்டார். கடந்த இரண்டு தசாப்தங்களாக, எரித்திரியா பொருளாதார தேக்க நிலை மற்றும் சமூக மற்றும் இராஜதந்திர தனிமை ஆகியவற்றில் மூழ்கியிருந்தாலும், அவர் ஒரு பெரிய கட்டாய இராணுவத்தை உருவாக்கி பராமரித்து வந்தார்.
எரித்திரியா மீது கடுமையான மீறல்கள் இருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் பலமுறை குற்றம் சாட்டியிருந்தது. எரித்திரியர்கள் கட்டாய இராணுவ சேவை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு மீதும், 2015-16ல் அகதிகள் நெருக்கடியின் உச்சத்தில் இருந்த போதும், அதன் அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தம் பெரிதும் அதிகரித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.