/indian-express-tamil/media/media_files/2025/06/12/D2LHwcJYjEFYiQsZEzEG.jpg)
அகமதாபாத் விமான விபத்து: கருப்புப் பெட்டிகள் ஏன் அவசியம்?
இந்தியாவின் மிக மோசமான விமான விபத்துக்களில் ஒன்றாக அகமதாபாத் ஏர் இந்தியா பயணிகள் விமான விபத்தாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பயணிகளுடன் வியாழக்கிழமை மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 டிரீம்லைனர் (VT-ANB) விமானம், டேக்-ஆஃப் ஆன சிறிது நேரத்திலேயே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லண்டனை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், வானில் 600 அடி உயரத்தை எட்டுவதற்கு முன்பாகவே, அகமதாபாத் நகரின் மேகானி நகர் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களுக்குப் பின் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறைகளின்படி, விமானத்தின் சிதைந்த பாகங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படும். மேலும், விபத்தின் இறுதித் தருணங்களில் என்ன நடந்தது? என்பதைத் துல்லியமாகக் கண்டறிய உதவும் Black Boxes மீட்டெடுக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருப்புப் பெட்டி (Black Box) என்றால் என்ன?
'கருப்புப் பெட்டி' என்பது விமானத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் ஒரு கருவி (flight recorder) ஆகும். இதன் வரலாறு 1950-களின் முற்பகுதியில் தொடங்குகிறது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) 1953 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெட் எரிபொருள் நிபுணரான டாக்டர் டேவிட் வாரன், சிறப்புக் குழுவில் சேர்க்கப்பட்டார். உலகின் முதல் வர்த்தக ஜெட் விமானமான 'டி ஹாவிலாண்ட் காமெட்' (de Havilland Comet) நடுவானில் வெடித்துச் சிதறிய தொடர் விபத்துக்களைப் பற்றி ஆய்வு செய்வதே அந்த குழுவின் நோக்கமாக இருந்தது. இந்த விமானம் 1952-ல் வர்த்தக ரீதியான பயணத்தைத் தொடங்கியது, ஆனால் அதன் ஆரம்ப ஆண்டுகளில் பல பெரிய விபத்துக்களைச் சந்தித்தது.
மே 2, 1953 அன்று, BOAC விமானம் 783 (BOAC Flight 783) கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டது. அப்போது கனமழை மற்றும் இடியுடன் கூடிய புயல் வீசியது. விமானத்தில் 43 பயணிகளும் பணியாளர்களும் இருந்தனர். அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாக (FAA) இணையதளத்தில் கூறப்பட்டுள்ளபடி, "விமானம் புறப்பட்ட ஆறே நிமிடங்களில், 7,500 அடி உயரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, நடுவானிலேயே விமானம் உடைந்து விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். இதுபோன்ற விபத்துகளுக்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கில்தான் கருப்புப் பெட்டி உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
கருப்புப் பெட்டி உருவான கதை:
இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் வாரன் அளித்த பேட்டியில், "நான் வர்த்தகக் கண்காட்சியில் ஒரு சிறிய கருவியைப் பார்த்தேன். அது என்னை மிகவும் கவர்ந்தது. அதுதான் உலகின் முதல் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய மிகச்சிறிய ரெக்கார்டர். அப்போது என் மனதில் 2 எண்ணங்களும் ஒன்றாக இணைந்தன. ஒருவேளை, விமானத்தில் பயணிக்கும் தொழிலதிபர் இதைப் பயன்படுத்திக்கொண்டிருந்து, விபத்துக்குப் பிறகு சிதைந்த பாகங்களில் இருந்து நாம் அதைக் கண்டெடுத்து இயக்கினால், 'விபத்துக்கான காரணம் என்னவென்று நமக்குத் தெரிந்துவிடும்' என்று நினைத்தேன்" எனக் குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில், இந்த யோசனைக்கு விமானிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. விமான சிப்பந்திகளைக் கண்காணிக்கவும், உளவு பார்க்கவும் இந்த ரெக்கார்டர்கள் பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் அஞ்சினர். இருப்பினும், அந்த எதிர்ப்புகளை மீறி, 1956-ல் டாக்டர் வாரன் prototype-ஐ உருவாக்கினார். அதற்கு ARL Flight Memory Unit என்று பெயரிடப்பட்டது. அந்தக் கருவி, 4 மணிநேரம் வரையிலான விமானிகளின் உரையாடல்களையும், விமானக் கருவிகளின் தரவுகளையும் சேமிக்கும் திறன் கொண்டதாக இருந்தது. அந்தப் பத்திரிக்கையின்படி, 2 விமான விபத்துக்களைத் தொடர்ந்து, 1963-ல் ஆஸ்திரேலியா, விமானங்களில் கருப்புப் பெட்டிகளைக் கட்டாயமாக்கிய உலகின் முதல் நாடானது.
கருப்புப் பெட்டியின் ஆரம்ப நாட்களில், தகவல்கள் ஒரு மெல்லிய உலோகத் தகட்டில் (metal strip) பதிவு செய்யப்பட்டன. பின்னர், தொழில்நுட்பம் மேம்பட்டு காந்த நாடாக்களுக்கு (magnetic drives) மாறியது. தற்போது, அதிநவீன சாலிட்-ஸ்டேட் மெமரி சிப்களில் (solid-state memory chips) தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன.
ஏன் ‘கருப்புப் பெட்டி’ (Black Box) என்று பெயர் வந்தது?
ஏர்பஸ் (Airbus) நிறுவனத்தின் இணையதளக் குறிப்புகளின்படி, ஆஸ்திரேலியாவின் டாக்டர் டேவிட் வாரனுக்கு முன்பாகவே, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொறியாளரான ஃபிராங்கோயிஸ் ஹுஸ்ஸேனாட் (François Hussenot) 1930-களிலேயே தரவுகளைப் பதிவு செய்யும் ஒரு கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் உருவாக்கிய கருவியில், விமானத்தின் சுமார் 10 வகையான செயல்பாடுகளை (வேகம், உயரம் போன்றவை) அளக்கும் சென்சார்கள் இருந்தன. இந்த சென்சார்களின் அளவீடுகள், ஒரு புகைப்படச் சுருளில் (photographic film) ஒளியின் மூலம் பதிவு செய்யப்பட்டன.
இந்த புகைப்படச் சுருள், உள்ளே சிறிதளவுகூட ஒளி நுழையாத வண்ணம் வடிவமைக்கப்பட்ட பெட்டிக்குள் வைத்து இயக்கப்பட்டது. இவ்வாறு, உள்ளே ஒளியே இல்லாமல் 'கருப்பாக' இருந்ததால், அந்தப் பெட்டிக்கு "கருப்புப் பெட்டி" என்ற பெயர் உருவானது. காலப்போக்கில் தொழில் நுட்பம் முற்றிலுமாக மாறிவிட்ட போதிலும், அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. சுவாரஸ்யமாக, விபத்து நடந்த இடங்களில் எளிதில் அடையாளம் காண வேண்டும் என்பதற்காக, கருப்புப் பெட்டியின் வெளிப்பகுதி எப்போதுமே பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருக்கும்.
கருப்புப் பெட்டிகள் எவ்வாறு உதவுகின்றன?
பெரும்பாலான விமானங்கள், 2 வகையான கருப்புப் பெட்டிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
- காக்பிட் குரல் பதிவுக் கருவி (Cockpit Voice Recorder - CVR)
- விமானத் தரவுப் பதிவுக் கருவி (Flight Data Recorder - FDR)
இந்த 2 கருவிகளும் விமானத்தின் பயணம் தொடர்பான தகவல்களைப் பதிவுசெய்து, விபத்து ஏற்படுவதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை வரிசைப்படுத்தி, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உதவுகின்றன.
குரல் பதிவுக் கருவி (CVR): இது விமானிகளின் அறைக்குள் (cockpit) நடக்கும் உரையாடல்கள், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான ரேடியோ தொடர்புகள், இயந்திரங்களின் சத்தம் மற்றும் பிற ஒலிகளைப் பதிவு செய்கிறது. இதன் மூலம் விமானிகளின் மனநிலை மற்றும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை அறியலாம்
தரவுப் பதிவுக் கருவி (FDR): இது 80-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான தொழில்நுட்பத் தகவல்களைப் பதிவு செய்கிறது. விமானத்தின் உயரம் (altitude), வேகம் (airspeed), பயணித்த திசை (flight heading), செங்குத்து முடுக்கம் (vertical acceleration), விமானத்தின் சாய்வு நிலை (pitch, roll), தானியங்கி விமானியின் நிலை (autopilot status) போன்ற மிகத் துல்லியமான தரவுகள் இதில் பதிவாகும்
இந்த 2 கருவிகளில் இருந்தும் கிடைக்கும் தகவல்களை ஒன்றுசேர்த்து ஆய்வு செய்வதன் மூலம், புலனாய்வாளர்கள் விபத்துக்கான மூல காரணத்தை மிகத் துல்லியமாகக் கண்டறிகின்றனர். ஒரு விபத்து நடந்த பிறகு, கருப்புப் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட தரவுகளை முழுமையாக ஆய்வு செய்ய பொதுவாக 10 முதல் 15 நாட்கள் வரை ஆகும்.
கருப்புப் பெட்டிகள் எங்கே வைக்கப்படுகின்றன?
கருப்புப் பெட்டிகளைப் பாதுகாக்கும் நோக்கில், அவை பொதுவாக விமானத்தின் வால் பகுதியில் (tail end) பொருத்தப்படுகின்றன. ஏனெனில், ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும் போது, அதன் வால் பகுதியில்தான் பாதிப்பின் தாக்கம் மிகக் குறைவாக இருக்கும். இந்த ரெக்கார்டர்கள், எஃகு (steel) டைட்டானியம் (titanium) போன்ற மிகவும் வலிமையான உலோகங்களால் ஆன ஒரு பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், கடும் வெப்பம், குளிர் அல்லது ஈரப்பதம் போன்ற எந்தச் சூழலையும் தாங்கும் வகையில் இந்தக் கருவிக்கு காப்புரை (insulation) இடப்பட்டிருக்கும். இதனால், மிகக் கொடூரமான விபத்துக்களிலும் உள்ளிருக்கும் தரவுகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.
விபத்துக்களில் தப்பிப்பது எப்படி?
விமானங்கள் கடலிலோ அல்லது பிற நீர்நிலைகளிலோ விழுந்து விபத்துக்குள்ளான சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபோன்ற சூழல்களில் கருப்புப் பெட்டிகளைக் கண்டறிவதை எளிதாக்க, அவற்றுடன் ஒரு பீக்கான் கருவி (beacon) இணைக்கப்பட்டிருக்கும். விமானம் மூழ்கியவுடன் இந்த பீக்கான் கருவி தானாகவே செயல்படத் தொடங்கி, அடுத்த 30 நாட்களுக்கு கேளா ஒலி அலைகளை (ultrasound signals) தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கும். மீட்புக் குழுவினர் இந்த சிக்னல்களைக் கொண்டு கருப்புப் பெட்டி இருக்கும் இடத்தைக் கண்டறிவார்கள்.
இருப்பினும், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 போன்ற சில சந்தர்ப்பங்களில், இந்தத் தொழில்நுட்பங்கள் இருந்தபோதிலும், கருப்புப் பெட்டிகளைக் கண்டுபிடிக்க முடியாமலும் போயுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.