Alzheimer’s day: 2012 முதல், உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அல்சைமர் விழிப்புணர்வை மாதமாகவும், செப்டம்பர் 21 அல்சைமர் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
அல்சைமர் நோய் என்பது ஒரு வகையான மூளைக் கோளாறு. இது பொதுவாக 60- 70 வயதுடைய மாக்களுக்கு ஏற்படும். 65 வயதிற்கு குறைவான நபர்களுக்கு மிகவும் அரிதாக ஏற்படலாம். அவ்வாறு ஏற்படுவதை ஆரம்பகால அல்சைமர் என மருத்துவ அறிவு குறிப்பிடுகிறது. 1906-ம் ஆண்டில் அலோயிஸ் அல்சைமர் என்பவரால் இந்த நோய் படிக்கப்பட்டு, விவரிக்கப்பட்டதால் இதற்க அல்சைமர் நோய் என்று பெயர் வரக் காரணமாய் அமைந்தது.
“உலக அல்சைமர் அறிக்கை 2019: டிமென்ஷியா மீதான அணுகுமுறைகள்”, என்ற அறிக்கையை சர்வதேச அல்சைமர் நோய் அமைப்பு (ஏடிஐ) தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள முக்கிய விவாதங்களை இங்கே காண்போம்
அல்சீமர் நோய் vs. டிமென்ஷியா :
டிமென்ஷியா என்பது ஒட்டுமொத்த நோய்களுக்கான அறிகுறி. அல்சீமர் என்பது ஒரு வகையான நோய். அதாவது, நினைவாற்றல் மங்குவது, சிந்திக்கும் திறனை இழப்பது , மொழியில் சிக்கல்களால் பாதிக்கப்படுவது, மனநிலை நிலையில்லாமல் அவ்வப்போது மாறுவது , ஏன்.... அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதற்கான திறனை முழுவதுமாய் இழப்பது போன்ற இந்த அறிகுறிக்கெல்லாம் டிமென்ஷியா என்பது பொருள். 50-75 சதவித டிமென்ஷியா அறிகுறி அல்சீமர் நோய் உடையவர்களிடம் தென்படுகிறது. இந்த டிமென்ஷியா பார்கின்சன் மற்றும் ஹண்டிங்டன் நோயாலும் வருகிறது என்கிறது மருத்துவம். உலக அல்சைமர் அறிக்கையின்படி, டிமென்ஷியா நோய்க்காக 1 டிரில்லியன் டாலர்கள் செலாவாகிறது. இந்த எண்ணிக்கை 2030 க்குள் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உலக அல்சைமர் அறிக்கையின்படி உலகம் முழுவதும் 50 மில்லியன் மக்கள் இந்த டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 58 சதவீதத்திற்கும் அதிகாமான மக்கள் இந்தியா,சீனா மற்றும் லத்தின் அமெரிக்கா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கின்றனர். இந்த 50 மில்லியன் மக்களில் 10 சதவீதத்திற்கும் குறைவான மக்களே மருத்துவத்தில் ஈடுபடுகின்றனர். டிமென்ஷியா எண்ணிக்கை 2050- ல் 125 மில்லியன் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அல்சீமர் நோய் வரக் காரணம் என்ன?
அல்சைமர் நோய்க்கான சரியான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. இருந்தாலும், விஞ்ஞானிகளிடையே ஓரளவு ஒருமித்த கருத்தாய் இருப்பது என்னவென்றால் பீட்டா-அமிலாய்ட் மற்றும் டவ் ஆகிய இரண்டு புரதங்களின் வெளிபாடே அல்சீமர் நோய் என்பதாகும். மனித உடம்பில் பீட்டா-அமிலாய்ட் புரதம் அசாதாரண நிலைகளை அடையும் போது, பிளேக்கை போன்ற வடிவமைப்பை உருவாக்கி நியூரான்களுக்கு இடையில் தன்னைத் தேக்கி வைத்துக் கொள்கிறது இந்த புரதம். இச்செயலினால், நியூரான் செல் செயல்பாடுகள் சீர்குலைக்கப் படுகிறது . அதேபோன்று, டவ் புரதமும் மனித உடம்பில் அசாதாரண நிலைகளை அடையும் போது, நியூரான்களுக்குள் “நியூரோபிப்ரிலரி” போன்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம், நியூரான்களின் போக்குவரத்து முறையை முற்றிலும் தடுக்கிறது. ஆனால் இந்த புரதங்கள் முதலில் ஏன் இந்த அசாதாரண நிலைகளை அடைகிறது என்ற காரணம் இன்னும் விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை என்பதே நிதரசனமான உண்மை.
இறப்புக்குப் பிறகு மூளையை ஆராய்வதன் மூலம் மட்டுமே டிமென்ஷியா மற்றும் அல்சீமர் நோய்களுக்கான காரணங்களை துல்லியமாகக் கண்டறிய முடியும். மரபணு ரீதியான காரணங்கள் தற்போது ஓரளவு முன்வைக்கபடுகிறது. எனினும், தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில், "உணவு, உடல் கூறு, புகைத்தல், ஆல்கஹால் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் அல்சைமர் நோய்க்கு மூன்றில் ஒரு பங்கு தொடர்பாகின்றன என்ற 2017 லான்செட் ஆய்வை மேற்கோள் காட்டியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய மக்கள் இதை எவ்வாறு அணுகிறார்கள்:
உலகளவில், மூன்றில் இரண்டு பேர் டிமென்ஷியா வயதாவதால் மட்டும் ஏற்படுகிறது என்று கருதுகின்றனர். 95 சதவீத பொது மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் டிமென்ஷியா நோய்க்கு உள்ளாக்கப் படுவோம் என்று நினைக்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் 23.4 சதவீத மக்களும், 7.4 மருத்துவர்களும் தங்களுக்கு டிமென்ஷியா இருப்பதை வெளியே சொல்லத் தயங்குகிறார்கள் என்பதை இந்த ஆய்வறிக்கை சொல்கிறது. மேலும், பொது ஜன மக்களில் 24.3 சதவீதம் பேர் டிமென்ஷியாவால் பாதிக்கப் பட்ட மக்களை " அபாயகரமான" மக்கள் என்று கருதி அவர்களோடு அணுக மறுக்கிறார்கள். மருத்துவத் துறையில் பணிபுரியும் 14.6 சதவீத பேரின் கருத்தும் இதுவாகவே உள்ளது. கணக்கெடுக்கப்பட்ட இந்தியர்களில், 85.8% பேர் டிமென்ஷியாவை உருவாகும் அபாயம் தெரியவந்தால் மரபணு விவரக்குறிப்பு சோதனை செய்வோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அல்சைமர் குணப்படுத்த முடியுமா?
தற்போது, அல்சைமர் நோய் மற்றும் பெரும்பாலான டிமென்ஷியா நோய் அறிகுறிகளை குணப்படுத்தப்படாத சூழ்நிலையில் இருப்பதால், அல்சைமரிலிருந்து மீளமுடியாது எனபதே நிதர்சனமான உண்மை. விஞ்ஞான சமூகம் இதுவரை நோயின் வளர்ச்சியைக் குறைக்கும் வழிமுறைகளை நோக்கியே செல்கின்றனர். நோய் ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது அல்லது அதன் முன்னேற்றத்தை எவ்வாறு தடுப்பது என்பதற்கு பதில் இன்னும் நம்மில் இல்லை . இந்த அறிக்கையின் கூற்றுப்படி, 6 முதல் 18 மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் அல்சைமர் நோயாளிகள் சிலருக்கு முன்னேற்றத்தை மெதுவாக்கும் சில மருந்துகள் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.