கோவா மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்கள் ( மொத்தம் 15 எம்எல்ஏக்கள்) முதல்வர் பிரமோத் சாவந்த் முன்னிலையில், ஆளுங்கட்சியான பா.ஜ.வில் இணைந்தனர். அதுபோல, தெலுங்கானாவில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேரில் 12 பேர் தங்களை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைத்துக்கொண்டனர். இந்த விவகாரங்களில் எல்லாம், கட்சி தாவல் தடை சட்டம் எந்தளவிற்கு வினைபுரிந்தது. கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் ஏதாவது பயன் விளைந்துள்ளதா என்பது தொடர்பாக காண்போம்.
கட்சி தாவல் தடை சட்டம்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வேறொரு கட்சிக்கு செல்வதை தடுக்கும் நோக்கில், கட்சி தாவல் தடை சட்டம், 1985ல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், 52வது திருத்தத்தின் படி, 10வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இதன்படி ஒரு கட்சியின் சார்பில் தேர்வான எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., மற்றொரு கட்சியில் சேர்ந்தால் அல்லது கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் அவர்களது பதவி பறிபோகும். ஆனால் ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மற்றொரு கட்சிக்கு தாவினால், அது கட்சி பிளவாக கருதப்படும். அந்த உறுப்பினர்களின் பதவி பறிபோகாது.
அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை
தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்எல்.ஏ.,க்கள் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு செல்லும்போது, அங்கு அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக, ஆட்சி கவிழவும் வாய்ப்பு உண்டாகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் கட்சி மாறுவதை தவிர்க்கும் பொருட்டு எண்ணற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பாக, பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டும், இது முழுமையாக நிறைவேற்றப்படாததற்கு முக்கியமான காரணமாக இருப்பது. இது பேச்சுரிமைக்கு எதிரான நடவடிக்கை என்று மக்களின் பிரதிநிதிகள் ஒருமித்து குரல் எழுப்பியதால் ஆகும்.
தகுதிநீ்க்கம் சாத்தியமா?...
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி, தான் கட்சி பொறுப்பிலிருந்து தன்னிச்சையாக விலகுவதாக சபாநாயகருக்கோ, கட்சி கொறடாவிற்கோ கடிதம் வழங்கினால், அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவார்.
ஒரு கட்சியின் சார்பில் தேர்வான எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., மற்றொரு கட்சியில் சேர்ந்தால் அல்லது கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதால், அவரது பதவி பறிபோகும்.
ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மற்றொரு கட்சிக்கு தாவினால், அது கட்சி பிளவாக கருதப்படும். அந்த உறுப்பினர்களின் பதவி பறிபோகாது.