/tamil-ie/media/media_files/uploads/2021/06/vaccine-explained-1.jpg)
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை வைரஸூக்கு எதிராக தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதை இங்கிலாந்தின் புதிய கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இந்த டெல்டா வகை என்பது இங்கிலாந்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய ஆல்பா வகையின் மாறுபாடாகும்.
புதிய கண்டுபிடிப்புகள் என்ன?
இங்கிலாந்தின் பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புதிய விஞ்ஞான பகுப்பாய்வு, கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு அளவுகள் இப்போது டெல்டா மாறுபாடு என அழைக்கப்படும் பி .1.617.2 காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதை தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. முக்கியமாக, தடுப்பூசி போட்டவர்களில் எந்த மரணமும் இல்லை.
மேற்கண்ட பகுப்பாய்வு இரண்டு தடுப்பூசிகளின் செயல்திறன் தரவை வழங்குகிறது. ஃபைசர்-பயோஎன்டெக்கின் எம்ஆர்என்ஏ தடுப்பூசி, இரண்டு அளவுகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு மருத்துவமனையில் சேருவதைத் தடுப்பதில் 96% பயனுள்ளதாக இருந்தது. ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இரண்டு அளவுகளுக்குப் பிறகு 92% பயனுள்ளதாக இருந்தது. இந்த தடுப்பூசியின் இந்திய பதிப்பு, இந்தியாவில் வழங்கப்படும் தடுப்பூசிகளில் ஒன்றான சீரம் நிறுவனத்தைச் சேர்ந்த கோவிஷீல்ட் ஆகும்.
பகுப்பாய்வு எவ்வாறு நடத்தப்பட்டது?
லண்டன் மற்றும் கைஸின் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின், மற்றும் லண்டனின் செயின்ட் தாமஸ் மருத்துவமனை என்.எச்.எஸ் டிரஸ்ட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஏப்ரல் 12 முதல் ஜூன் 4 வரை இங்கிலாந்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்படும், கொரோனாவின் அனைத்து அறிகுறிகளையும் கொண்டவர்களின் விவரங்களை, அவசர சிகிச்சை தரவுத்தொகுப்புடன் (ஈ.சி.டி.எஸ்) இணைத்துள்ளனர். டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட 14,019 பேரிடம் இந்த பகுப்பாய்வு நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 166 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்.
டெல்டா வகை மாறுப்பாட்டால் மருத்துவமனையில் சேர்ப்பதைத் தடுப்பதில் தடுப்பூசிகளின் செயல்திறன், ஆல்பா வகைக்கு எதிராக செயல்பட்டதை ஒத்திருப்பதாக பகுப்பாய்வு காட்டுகிறது. ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் முதல் டோஸுக்குப் பிறகு 94% மற்றும் இரண்டாவது டோஸூக்கு பிறகு 96%. ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் செயல்திறன் முதல் டோஸுக்குப் பிறகு 71% மற்றும் இரண்டாவது டோஸுக்குப் பிறகு 92%.
"இந்த கண்டுபிடிப்புகள் டெல்டா மாறுபாட்டுடன் 1 அல்லது 2 டோஸ் தடுப்பூசிகளைக் கொண்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு எதிராக மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பைக் குறிக்கின்றன" என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் முடித்தனர், இந்த ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.
இதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டியவை என்ன?
தடுப்பூசிகளின் இரு டோஸ்களும் உங்களுக்கு வழங்கப்படும் போது பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் இதன் மூலம் தற்போதுள்ள மற்றும் வளர்ந்து வரும் அனைத்து வைரஸ் வகைகளுக்கு எதிராக அதிகபட்ச பாதுகாப்பைப் பெற முடியும் என்று சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.
செவ்வாய்கிழமை அன்று, PHE இன் நிகழ் நேர தகவல்கள், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் செயல்திறன், லேசான அறிகுறியுடைய பாதிப்புகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க அளவு இருந்தாலும், ஆல்பா மாறுபாட்டிற்கு எதிராக 74% மற்றும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக 64% என குறைவாகவே உள்ளது என காட்டுகிறது. " கோவிட் -19 தடுப்பூசியான அஸ்ட்ராஜெனெகாவின் அதிக செயல் திறன், கடுமையான நோய் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு எதிரான, வலுவான டி-செல் பதிலைக் காட்டும் சமீபத்திய தரவுகளால் ஆதரிக்கப்படுகிறது, இது உயர் மற்றும் நீடித்த பாதுகாப்போடு தொடர்புபடுத்தப்பட வேண்டும்" என்று அஸ்ட்ராஜெனெகா கூறியுள்ளது.
இந்தியாவில் 88% அளவைக் கொடுக்கும் கோவிஷீல்ட், நாட்டில் மருத்துவமனையில் அனுமதிப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தரவு தெரிவிக்கிறது.
" தற்போது அதன் விரைவான பரிமாற்றத்தால் ஒரு முக்கியமான கவலையாக இருக்கும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஜெனெகா உயர் மட்ட பாதுகாப்பை வழங்குகிறது என்பதை இந்த நிகழ் நேர சான்றுகள் காட்டுகின்றன." என்று அஸ்ட்ராசானெகாவில் உள்ள பயோஃபார்மாசூட்டிகல்ஸ் ஆர் அன்ட் டி நிர்வாக துணைத் தலைவர் மெனே பங்கலோஸ் கூறினார்.
டெல்டாவில் வேறு புதிய கண்டுபிடிப்புகள் உள்ளதா?
ஜூன் 11 அன்று, PHE ஒரு தொழில்நுட்ப மாநாட்டில் டெல்டாவிற்கான 28 நாள் பாதிப்பு இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது (0.1%) “… இறப்பு ஒரு பின்தங்கிய குறிகாட்டியாக இருந்தாலும், பெரும்பாலான பாதிப்புகள் தொடர்ந்து 28 நாட்களுக்குள் உள்ளன ” என்று கூறியது.
செவ்வாயன்று, தி லான்செட், ஸ்காட்லாந்தில் ஏப்ரல் மற்றும் ஜூன் 6 க்கு இடையிலான காலத்தை உள்ளடக்கிய டெல்டா மாறுபாட்டின் பகுப்பாய்வை வெளியிட்டது. ஆராய்ச்சியாளர்கள் 19,543 உறுதிப்படுத்தப்பட்ட SARS-CoV-2 நோய்த்தொற்றுகளை ஆய்வு செய்தனர், அவர்களில் 377 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்.
ஸ்காட்லாந்தில் உள்ள டெல்டா மாறுபாடு முக்கியமாக இளைய மற்றும் அதிக வசதியான குழுக்களில் காணப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆல்பா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது டெல்டா மாறுபாடு உள்ளவர்களில் மருத்துவமனை சேர்க்கைக்கான ஆபத்து ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.