scorecardresearch

மகாபரிநிர்வான தினம்: மார்க்சியத்தைவிட சிறந்தது பௌத்தம்… அம்பேத்கர் கூறியது என்ன?

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தெளிவாகவும் ஆய்வு முறையில் எழுதிய ஒரு கட்டுரையில், பௌத்தத்தை மார்க்சியத்துடன் ஒப்பிட்டு, அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை பட்டியலிட்டுள்ளார். அவரது வாதங்களின் சுருக்கத்தை இங்கே பார்க்கலாம்.

BR Ambedkar, Mahaparinirvan Diwas, Mahaparinirwan Diwas, புத்தரா கார்ல் மார்க்ஸா, புத்தர், மார்க்சியம், பௌத்தம், அம்பேத்கர் நினைவு தினம், மகாபரிநிர்வான தினம், Ambedkar on religion, ambedkar on marxism, express explained, indian express, Mahaparinirwan Diwas meaning

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை பாபசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மறைந்த டிசம்பர் 6-ம் தேதி ‘மகாபரிநிர்வான தினம்’ என அனுசரிக்கப்படுகிறது. ‘பரிநிர்வானம்’ என்பதை மரணத்திற்குப்பின் நிகழ்வு என்று எடுத்துக்கொள்ளலாம். பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடுவது என்று பொருள். டாக்டர் அம்பேத்கர், ‘நான் இந்துவாக சாக மாட்டேன்’ என்ற தனது பிரகடனத்தை நிறைவேற்றி, புத்த மதத்துக்கு மாறி இரண்டு மாதங்களுக்குள், டிசம்பர் 6, 1956-ல் காலமானார்.

முக்கிய மதங்கள் மீதான அவரது கடுமையான விமர்சனத்தின் மூலம், அம்பேத்கர் ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் பொது வாழ்வில் மதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தபோது, ​​மதத்திற்கு எதிரானவர் என்று அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார். பௌத்தம் மற்ற மதங்களைவிட உயர்ந்தது என்பது பற்றிய அவருடைய கருத்துக்கள் நன்கு அறியப்பட்டவை. இருப்பினும், அம்பேத்கர் புத்தரின் வழி, மதத்தை நிராகரிக்கும் தத்துவமான மார்க்சியத்தைவிட சிறந்தது என்று நம்பினார்.

அம்பேத்கர் தெளிவாகவும் ஆய்வுப் பூர்வமாகவு எழுதிய ஒரு கட்டுரையில், பௌத்தத்தை மார்க்சியத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். இருவரும் (புத்தர் – கார்ல் மார்க்ஸ்) ஒரு நியாயமான மற்றும் மகிழ்ச்சியான சமூகத்தின் ஒரே நோக்கத்திற்காக பாடுபடும் அதே வேளையில், புத்தர் கூறிய வழிமுறைகள் மார்க்ஸ் கூறியதைவிட உயர்ந்தவை என்று கூறினார்.

“மார்க்சியர்கள் இதைப் பார்த்து நகைக்கக்கூடும். மார்க்ஸையும் புத்தரையும் சம அளவில் வைத்துப் பார்க்கும் யோசனையை கிண்டல் செய்யலாம். மார்க்ஸ் நவீனமானவர், புத்தர் பழமையானவர்! மார்க்சியர்கள் தங்கள் கோட்பாட்டுத் தலைமை மார்க்ஸ் உடன் ஒப்பிடும்போது புத்தர் வெறும் பழமையானவராக இருகிறார் என்று கூறலாம். மார்க்சியர்கள் தங்களின் முன்முடிவு எண்ணங்களை விடுத்து புத்தரைப் படித்து, அவர் எதற்காக நின்றார் என்பதைப் புரிந்து கொண்டால், அவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வார்கள் என்று நான் உறுதியாக உணர்கிறேன்” என்று அம்பேத்கர் எழுதியுள்ளார்.

பௌத்தம் மற்றும் மார்க்சியம் இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் காட்ட, அம்பேத்கர் முதலில் இரண்டின் அடிப்படைத் தத்துவத்தையும் அவற்றின் சாரத்தையும் நேர்த்தியாக பட்டியலிடுகிறார்.

பௌத்தத்தைப் பொறுத்தவரை, அவர் 25 கருத்துகளைப் பட்டியலிடுகிறார்: “மதத்தின் செயல்பாடு உலகை மறுகட்டமைப்பதும் உலகை மகிழ்ச்சியாக மாற்றுவதும்தான். மதத்தின் செயல்பாடு உலகின் தோற்றம் அல்லது அதன் முடிவை விளக்குவது அல்ல; தனிச் சொத்துரிமை ஒரு வகுப்பினருக்கு அதிகாரத்தையும் மற்றொரு வகுப்பினருக்கு வருத்தத்தையும் தருகிறது; இந்த துக்கத்தை அதன் காரணத்தை நீக்கி அகற்றுவது சமுதாயத்தின் நன்மைக்கு அவசியம் என்றும் அனைத்து மனிதர்களும் சமம்” என்றும் கூறுகிறார்.

மார்க்ஸைப் பற்றி எழுதுகையில், “மிஞ்சியிருப்பது புரட்சியின் எச்சம், சிறியதுதான் ஆனால் இன்னும் முக்கியமானது” என்று அவர் கூறுகிறார். மிஞ்சியிருப்பதை அவர் நான்கு புள்ளிகளாக சுருக்கமாகக் கூறுகிறார். “தத்துவத்தின் செயல்பாடு உலகத்தை மறுகட்டமைப்பதே தவிர, உலகத்தின் தோற்றத்தை விளக்குவதில் நேரத்தை வீணாக்குவதில்லை; தனிச் சொத்துரிமை ஒரு வகுப்பினருக்கு அதிகாரத்தையும், சுரண்டலின் மூலம் இன்னொரு வர்க்கத்திற்கு துக்கத்தையும் தருகிறது; தனிச் சொத்துரிமையை ஒழிப்பதன் மூலம் துக்கம் நீங்குவது சமுதாய நலனுக்கு அவசியம்” என்கிறார்.

டாக்டர் அம்பேத்கர் கூறுகையில், ​​பௌத்தத்தின் தனிச் சொத்தை ஒழிக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு, அதன் ‘பிக்குகள்’ எப்படி உலகப் பொருட்களின் மீதான பற்றை விட்டுவிடுகிறார்கள் என்பதில் தெரிகிறது. பிக்குகள் சொத்து அல்லது உடைமைகளை வைத்திருப்பதற்கான விதிகள் ‘ரஷ்யாவில் கம்யூனிசத்தில் இருப்பதை விட மிகவும் கடுமையானவை’ என்று அவர் கூறுகிறார்.

மகிழ்ச்சியான மற்றும் நியாயமான சமுதாயத்தை நிறுவ, புத்தர் தன்னை பின்பற்றியவர்களுக்கு ஒரு மார்க்கத்தை வகுத்தார். அம்பேத்கர் எழுதுகையில், “ஒரு மனிதனை அவனது தார்மீக மனப்பான்மையை மாற்றியமைத்து, தானாக முன்வந்து தம்ம வழியைப் பின்பற்றுவது புத்தர் பின்பற்றிய வழிமுறைகள் என்பது தெளிவாகிறது. கம்யூனிஸ்டுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் சமமான தெளிவான, குறுகிய மற்றும் விரைவானது. அவை (1) வன்முறை மற்றும் (2) பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்… புத்தருக்கும் கார்ல் மார்க்சுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் என்ன என்பது இப்போது தெளிவாகிறது. வேறுபாடுகள் வழிமுறைகளைப் பற்றியது. முடிவு இருவருக்கும் பொதுவானது.” என்று என்று கூறுகிறார்.

இந்திய அரசியலமைப்பின் உந்து சக்தியான அம்பேத்கர், புத்தர் ஒரு ஜனநாயகவாதி என்று கூறுகிறார். “சர்வாதிகாரத்தைப் பொறுத்தவரை புத்தரிடம் அப்படி எதுவும் இருக்காது. அவர் ஒரு ஜனநாயகவாதியாக பிறந்தார். அவர் ஒரு ஜனநாயகவாதியாக இறந்தார்” என்று அம்பேத்கர் எழுதுகிறார்.

கம்யூனிஸ்டுகள் இறுதியில் அரசு உதிர்ந்துவிடும் என்று கூறினாலும், அது எப்போது நடக்கும், அரசுக்கு மாற்று எது என்று அவர்கள் பதிலளிக்கவில்லை என்று அம்பேத்கர் எழுதுகிறார்.

“அரசு நிரந்தர சர்வாதிகாரம் என்ற அவர்களின் கோட்பாடு அவர்களின் அரசியல் தத்துவத்தின் பலவீனம் என்பதை கம்யூனிஸ்டுகளே ஒப்புக்கொள்கிறார்கள். இறுதியில் அரசு உதிர்ந்துவிடும் என்ற கருத்தின் கீழ் அவர்கள் தஞ்சம் அடைகிறார்கள்.” என்று அம்பேத்கர் எழுதுகிறார்.

இரண்டு கேள்விகளில், அரசுக்கு மாற்று எது என்பதை விட முக்கியமானது. அது சர்வாதிகாரம் என்றால், கம்யூனிஸ்ட் அரசைக் கட்டியெழுப்புவது ஒரு பயனற்ற முயற்சியாக இருந்திருக்கும் என்று எழுதுகிறார்.

“அதிகார பலத்தை தவிர, வேறு எதனாலும் அதைத் தக்கவைக்க முடியாவிட்டால், ஒன்றினைத்து வைத்திருக்கும் சக்தி திரும்பப் பெறப்பட்டால் அது சர்வாதிகாரத்தை விளைவித்தால், கம்யூனிஸ்ட் அரசால் என்ன பயன். படை விலக்கப்பட்ட பிறகு அதைத் தக்கவைக்கக்கூடிய ஒரே விஷயம் மதம். ஆனால், கம்யூனிஸ்டுகளுக்கு மதம் வெறுக்கத்தக்கது. அவர்களிடம் மதத்தின் மீதான வெறுப்பு மிகவும் ஆழமாக அமர்ந்திருக்கிறது. அவர்கள் கம்யூனிசத்திற்கு உதவும் மதங்கள் மற்றும் கம்யூனிஸத்திற்கு உதவாத மதங்கள் என்று கூட பாகுபாடு காட்ட மாட்டார்கள்” என்று அம்பேத்கர் எழுதுகிறார்.

கம்யூனிசத்தை நிலைநிறுத்த பௌத்தம் கடைசி உதவி

அம்பேத்கர் பௌத்தம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடுகளைக் கூறுகிறார். “கம்யூனிஸ்டுகளிடம் வெறுப்பு இருக்கிறது. பழமையான மதமான பௌத்தத்தில் அந்த மாதிரியான தவறுகள் இல்லை என்று கூறுகிறார். இவ்வுலகில் வறுமையையும் துன்பத்தையும் புகழ்வதற்கு பதிலாக, மக்களை மறுமையைக் கனவு காணச் செய்வதற்குப் பதிலாக – கிறித்துவ மதம் கூறுவது போல இல்லாமல், பௌத்த மதம் இவ்வுலகில் மகிழ்ச்சியாக இருக்கவும், சட்டப்பூர்வமான வழிகளில் செல்வத்தைப் பெறவும் பேசுகிறது” என்று அம்பேத்கர் எழுதுகிறார்.

“கம்யூனிசத்தை நிலைநிறுத்துவதற்கான இறுதி உதவியாக பௌத்தத்தின் மீது ரஷ்யர்கள் எந்த கவனத்தையும் செலுத்தவில்லை. சர்வாதிகாரம் இல்லாமல் சங்கத்தின் மூலமாக புத்தர் கம்யூனிசத்தை நிறுவியதே அனைத்து அதிசயங்களிலும் அதிசயம் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அது மிகச் சிறிய அளவில் கம்யூனிசமாக இருக்கலாம். ஆனால், சர்வாதிகாரம் இல்லாத கம்யூனிசம் லெனின் செய்யத் தவறிய அதிசயம்… புத்தரின் வழிமுறை மனிதனின் மனதை மாற்றுவது: அவனது மனநிலையை மாற்றுவது: மனிதன் எதைச் செய்தாலும் அவன் பலம் அல்லது நிர்பந்தம் இல்லாமல் தானாக முன்வந்து செய்ய வேண்டும்” என்று அம்பேத்கர் எழுதுகிறார்.

“ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் சர்வாதிகாரம் அதன் பெருமைக்கு அற்புதமான சாதனைகளைக் கொண்டுள்ளது, சகோதரத்துவம் அல்லது சுதந்திரம் இல்லாமல் சமத்துவத்திற்கு எந்த மதிப்பும் இருக்காது. மேலும், ஒருவர் புத்தரின் வழியை பின்பற்றுவார் என்றால், அங்கே இந்த மூன்றும் ஒன்றாக இருப்பத்கைக் காணலாம். கம்யூனிசம் ஒன்றைக் கொடுக்க முடியும். ஆனால், எல்லாவற்றையும் கொடுக்க முடியாது.” என்று அம்பேத்கர் எழுதுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Babasaheb ambedkar mahaparinirvan diwas what ambedkar said about buddhism and marxism

Best of Express