ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை இறுதி செய்வதற்கு முன், தபால் வாக்குகளை எண்ணும் பணியை முடிக்க தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு இந்தியா கூட்டணி, தேர்தல் ஆணையத்திடம் ஞாயிற்றுக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் தபால் வாக்குகளை எண்ணுவதற்கான தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களில் ஏற்பட்ட மாற்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகளின் கவலை உருவாகியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தல் வரை, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, 30 நிமிடங்களுக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
மேலும் மின்னணு வாக்குகளை எண்ணும் பணி முடிவடைவதற்குள் அனைத்து தபால் வாக்குகளும் எண்ணப்பட்டிருக்க வேண்டும்.
எந்தச் சூழ்நிலையிலும், தபால் வாக்கு எண்ணிக்கையை இறுதி செய்வதற்கு முன், மின்னணு வாக்குகளின் அனைத்து சுற்றுகளின் முடிவுகளையும் அறிவிக்கக் கூடாது, என்று பிப்ரவரி 2019 இல், வாக்கு எண்ணும் முகவர்களுக்கான தேர்தல் ஆணையத்தின் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது, தபால் வாக்கு எண்ணிக்கை மின்னணு வாக்கு எண்ணிக்கைக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தொடங்குகிறது, ஆனால் முன்பு இருந்தது போல், மின்னணு வாக்கு எண்ணும் பணிக்கு, முன்பாக முடிக்க வேண்டியதில்லை.
2019 தேர்தலுக்குப் பிறகு தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், குறிப்பாக மின்னணு முறையில் அனுப்பப்படும் தபால் வாக்குச் சீட்டு முறை (ETPBS) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வாக்குச் சாவடிகளின் VVPAT சீட்டுகளை கட்டாயமாக எண்ணுவது போன்ற வழிகாட்டுதல்களை மாற்ற தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
மே 18, 2019 அன்று அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பிய உத்தரவில், தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிந்த பின்னரே இறுதிச் சுற்று மின்னணு வாக்குகளை எண்ணும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற தனது முந்தைய வழிகாட்டுதலை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது.
அதற்கு பதிலாக, தபால் வாக்கு எண்ணும் பணி எந்த நிலையில் இருந்தாலும், மின்னணு வாக்குகளை எண்ணும் பணியை தொடரலாம். மின்னணு வாக்குகளை எண்ணும் பணி முடிந்ததும், விவிபேட் (VVPAT) சீட்டுகளை எண்ணலாம்.
முன்னதாக, மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கையை விட வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்தால் தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. இப்போது, எண்ணும் போது செல்லாது என நிராகரிக்கப்பட்ட தபால் ஓட்டுகள், அந்த வாக்கு எண்ணிக்கையை விட வித்தியாசம் குறைவாக இருந்தால், மீண்டும் சரிபார்க்கப்படும்.
2019 மக்களவைத் தேர்தலில் மொத்தம் 22.71 லட்சம் தபால் வாக்குகள் அல்லது மொத்த செல்லுபடியாகும் 60.76 கோடி வாக்குகளில் 0.37% பெறப்பட்டாலும், இம்முறை தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கள் சொந்த மாநிலங்களுக்கு வெளியே பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகள் போன்ற சேவை வாக்காளர்களைத் தவிர, அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபா வாக்குச் சீட்டை அக்டோபர் 2019 இல் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.
அப்போதிருந்து, முதியோருக்கான வயது வரம்பு 85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் கோவிட்-19 நோயாளிகள் தபால் வாக்குகளுக்குத் தகுதியானவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எண்ணும் பணி குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. தேர்தல் ஆணையத்திற்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், 2020 பீகார் தேர்தலில் வெற்றி வித்தியாசம் மாநிலத்திற்கு 12,700 வாக்குகள் என்றும், அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கை 52,000 என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
உண்மையில், கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கிய பிறகு பீகாரில் முதல் தேர்தல் நடத்தப்பட்டது, மின்னனு வாக்குகள் எண்ணப்பட்டு இறுதியில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட முதல் தேர்தல் என்பதால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது, என்று இந்தியா கூட்டணி தெரிவித்தன.
அவர்கள் மே 2019 கடிதத்தை திரும்பப் பெறுமாறும், தேர்தல் நடத்தை விதிகள், 1961 இன் விதி 54A க்கு இணங்க தேர்தல் நடத்தும் அலுவலர் முதலில் தபால் வாக்குச் சீட்டுகளை கையாள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டனர்.
Read in English: Behind Opposition postal ballot concern, Election Commission rule change in 2019
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“