அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (JAHA) இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி குடிப்பது, காபி அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, கடுமையான உயர் பி.பி. (160/100 mm H அல்லது அதற்கும் அதிகமான) உள்ளவர்களிடையே இருதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயத்தை இரட்டிப்பாக்கலாம்.
இதற்கு நேர்மாறாக, ஒரு கப் காபி மற்றும் தினசரி கிரீன் டீ உட்கொள்வது எந்த இரத்த அழுத்த அளவீட்டிலும் இருதய நோய் தொடர்பான இறப்பு அபாயத்தை அதிகரிக்கவில்லை, இரண்டு பானங்களிலும் காஃபின் இருந்தாலும் என்று ஜப்பானில் 18,600க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) படி, 8-அவுன்ஸ் (சுமார் 240 ml) கிரீன் அல்லது கருப்பு தேநீரில் 30-50 mg காஃபின் உள்ளது, மேலும் 8-அவுன்ஸ் காபியில் 80-100 mg காஃபின் உள்ளது.
முந்தைய ஆராய்ச்சியில் ஒரு நாளைக்கு ஒரு கப் காபி குடிப்பது மாரடைப்பு நோயாளிகளுக்கு, மாரடைப்பிற்குப் பிறகு இறப்பு அபாயத்தைக் குறைப்பதன் மூலம் உதவலாம், மேலும் ஆரோக்கியமான நபர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று கண்டறிந்தது.
வேறு சில ஆய்வுகள் தொடர்ந்து காபி குடிப்பது, வகை 2 நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம்; பசியைக் கட்டுப்படுத்த உதவலாம்; மனச்சோர்வின் அபாயத்தைக் குறைக்க அல்லது விழிப்புணர்வை அதிகரிக்க உதவலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
இருப்பினும் இந்த விளைவு காஃபின் அல்லது காபியில் உள்ள வேறு ஏதாவதில் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் தீங்கு விளைவிக்கும் நோக்கில் பார்க்கும் போது , அதிகப்படியான காபி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம், இது கவலை, படபடப்பு மற்றும் தூங்குவதில் சிரமத்திற்கு வழிவகுக்கும்.
காபியின் அறியப்பட்ட பாதுகாப்பு விளைவு வெவ்வேறு அளவு உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கும் பொருந்துமா என்பதைத் தீர்மானிப்பதை எங்கள் ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதே குழுவிடம் கிரீன் டீ விளைவுகளை ஆய்வு செய்த ஆய்வின் மூத்த எழுத்தாளர் ஹிரோயாசு ஐசோ, ஒசாகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறினார்.
எங்களுக்கு தெரிந்தவரையில், தினசரி 2 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி குடிப்பதற்கும் கடுமையான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களிடையே இருதய நோய் இறப்புக்கும் இடையே ஒரு தொடர்பைக் கண்டறியும் முதல் ஆய்வு இதுவாகும்.
உயர் இரத்த அழுத்தம், ஹைப்பர்டென்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது, இரத்த நாளங்களின் சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் விசை தொடர்ந்து அதிகமாக இருக்கும் போது ஏற்படுகிறது, இதனால் இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக வேலை செய்கிறது.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மற்றும் அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் தற்போதைய இரத்த அழுத்த வழிகாட்டுதல்கள், 130/80 mm Hg அல்லது அதற்கு மேற்பட்ட இரத்த அழுத்த அளவை, உயர் இரத்த அழுத்தமாக வகைப்படுத்துகின்றன.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“